சர்வதேச அடையாள எண் (ஐ.எம்.இ.ஐ.) இல்லாத சீன செல்போன்களுக்கு வரும் 15ம் தேதியிலிருந்து இணைப்பு ரத்து செய்யப்படுகிறது. இதனால் 2.5 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.
நோக்கியா, சாம்சங் போன்ற பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் தயாரிக்கும் செல்பேசிகளில், 15 இலக்கம் கொண்ட சர்வதேச அடையாள எண் இருக்கும். ஒருவரது செல்போன் திருடுபோனால், அதை மற்றவர்கள் உபயோகிக்காமல் தடுக்கவும், இந்த எண்ணைக் கொண்டு, அந்த செல்பேசியில் இருந்து எப்போதெல்லாம் எந்தெந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது என்பதையும் அறிய முடியும்.
ஆனால், விலை மலிவான சீன மற்றும் கொரிய செல்போன்களில் ஐ.எம்.இ.ஐ. அடையாள எண் இல்லை. இதனால் தீவிரவாதிகள் சதித் திட்டங்களுக்கு இந்த செல்போன்களையே உபயோகிக்கின்றனர்.
இதனால், சீன மற்றும் கொரிய செல்போன்களுக்கு இணைப்பை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் செல்பேசி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதல் உத்தரவு வெளியிடப்பட்டது. டிசம்பர் 31ம் தேதி வரையில் கெடு விதிக்கப்பட்டது.
பின்னர் ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கு மேல் கெடு நீட்டிக்கப்படாது என்று மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் கண்டிப்புடன் தெரிவித்துவிட்டது.
இதனால் வரும் 15ம் தேதியில் இருந்து ஐ.எம்.இ.ஐ. எண் இல்லாத செல்பேசிகளுக்கு இணைப்பு ரத்தாகும். இந்த 2.5 கோடி செல்பேசிகள் ஜி.எஸ்.எம். அலைவரிசையில் இயங்கும் மொத்த செல்பேசிகளில் 10 விழுக்காடு ஆகும்.
இணைப்பு ரத்து தொடர்பாக பல நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தகவல் கொடுத்து வருகின்றன. உடனடியாக செல்பேசியை மாற்றும்படி கூறி வருகின்றன.