ஐ.பி.எல். முறைகேடுகள் தொடர்பாக அதன் தலைவர் லலித் மோடியிடம் மும்பையில் சமீபத்தில் வருமான வரி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்கள். அவரிடம் வருமான வரி அதிகாரிகள் நேற்று மீண்டும் விசாரணை நடத்தியுள்ளனர்.
மும்பையில் ஹோட்டல் ஒன்றில் உள்ள லலித் மோடியின் அலுவலகத்தில் இந்த விசாரணை நடந்தது. 6 அதிகாரிகள் 30 நிமிடம் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு உரிமையை வழங்கியது தொடர்பாக, லலித் மோடியிடம் விசாரணை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஒரு வாரத்தில் லலித் மோடியிடம் வருமான வரி அதிகாரிகள் விசாரணை நடத்துவது இது 2-வது தடவை ஆகும்.
இதனிடையே கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஹைதராபாத் டெக்கான் சார்ஜஸ் ஆகிய அணிகளின் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளளனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.