உலகத்தில் இருக்கும் இந்தியர்கள் அனைவரும் தங்களது திறமைகளைப் பரிமாறிக் கொண்டு முன்னேற்றம் அடைவதற்கான புதிய திட்டத்தை, சென்னையில் நடக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து மத்திய வெளிநாட்டு இந்தியர் விவகாரத் துறை செயலாளர் கே.மோகன்தாஸ் கூறுகையில், இதுவரை இல்லாத அளவுக்கு 48 நாடுகளில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு இந்தியர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பதிவு செய்துள்ளனர்.
இது கடந்த மாநாட்டை விட 50 சதவீத அதிகமாகும். இந்த மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி வைத்தார். 9-ந் தேதி மாநாட்டு இறுதி நாள் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் கலந்து கொள்கிறார்.
உலகமெங்கும் வசிக்கும் இந்தியர்களை ஒருங்கிணைக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்று தொடங்கப்பட உள்ளது. உலக அளவிலான இந்தியர்கள் திறமைப் பரிமாற்ற வலைதளத் திட்டம் என்ற இந்தத் திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங், இந்த மாநாட்டில் தொடங்கி வைக்கிறார்.
உலகின் எந்தப் பகுதியில் வசிக்கும் இந்தியர் என்றாலும் மற்ற இந்தியர்களைத் தொடர்பு கொண்டு அவரவர் திறமைகளை வெளிக்கொணர்ந்து 2 பேருமே மேம்பாடு அடையும் திட்டம் இது. வீணாக அலையாமல், மற்ற இந்தியர் மூலமாகவே பணியாற்றலாம். மற்ற நாடுகள் இதுபோல் செய்ததில்லை. வெளிநாட்டில் வசிக்கும் 2 கோடியே 50 லட்சம் இந்தியர்களும் இதனால் பயன் அடைய முடியும்.
மூதாதையர்கள் பற்றி அறிந்து கொள்வதற்கான திட்டம் மற்றும் இந்தியாவைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதற்கான திட்டம் ஆகியவற்றுக்கு வெளிநாட்டு இந்தியர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் பலர் இந்த மாநாட்டுக்கு வந்துள்ளனர்.
மத்திய அமைச்சர்கள் மற்றும் இந்த மாநாட்டிற்கு வந்திருப்பவர்களுக்கு, தமிழக முதலமைச்சர் கருணாநிதி நாளை இரவு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார் என்றும் கூறினார்.