இவை ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமாயின் உங்களது நீரிழிவை எப்பொழுதும் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். உங்கள் நீரிழிவு கட்டுப்பாட்டில் இருக்கிறதா என நீங்கள் அறிய சில பரிசோதனைகள் உதவும். சிறுநீர் மற்றும் உங்கள் இரத்தத்தின் குளுக்கோஸ் குறிப்பிட்ட கால இடைவெளியில் அளவிட வேண்டியது அவசியம். இவற்றை அளவிடும் முறைகள்:
சிறுநீர் பரிசோதனை! நீரிழிவைக் கண்டுப்பிடிக்கவும், கட்டுப்படுத்தவும் ஆண்டாண்டு காலமாகச் செய்யப்படுவதுதான் சிறுநீர்ப் பரிசோதனை. இது உங்கள் இரத்த குளுக்கோஸின் அளவை மறைமுகமாக அறிய ஓரளவு உதவும். ஆயினும் உங்கள் நீரிழிவு நோயின் நிலையைத் திட்டவட்டமாக அறிய இது உதவாது. இரத்தப் பரிசோதனை செய்ய வசதியற்ற இடங்களில் இதைச் செய்யலாம். இதை இரண்டு வழிகளில் செய்வர்.
1. பெனடிக் பரிசோதனை
2. டிப்ஸ்டிக் பரிசோதனை
இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மட்டம் 180க்கு மேற்சென்றால் மட்டுமே சிறுநீரில் சர்க்கரை இருப்பது தெரிய வரும் இன்னும் சிலரில் இரத்த குளுக்கோஸ் 180க்கு மேற்பட்டால் கூட சிறுநீரில் சர்க்கரை வெளிப்படாது. வேறு சிலருக்கு இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருந்தாலும் சிறுநீரில் வெளிப்படும். எனவே சிறுநீர்ப் பரிசோதனையை மட்டும் வைத்துக் கொண்டு ஒருவருக்கு நீரிழிவு இருக்கிறதா எனச் சொல்ல முடியாது.
அதேபோல் சிறுநீர்ப் பரிசோதனையை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவரது நீரிழிவுக்கான சிகிச்சையை நெறிப்படுத்த முடியாது. இரத்தப் பரிசோதனைகள் இரத்த குளுக்கோஸின் அளவை துல்லியமாகக் காட்டும். இதனை நீங்கள் இரண்டு வழிகளில் செய்யலாம்.
1. குளுக்கோமீட்டர் பரிசோதனை
2. ஆய்வுகூடங்களில் செய்யப்படும் நாளக்குருதி குளுக்கோஸ் அளவிடல் பரிசோதனை.
குளுக்கோமீட்டர் பரிசோதனை வீட்டிலும் செய்யக்கூடியது. இதனால் ஒவ்வொரு பரிசோதனைக்காகவும் நீங்கள் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியதில்லை. விரல் நுனியிலிருந்து ஒரு சொட்டு இரத்தம் வலியின்றி எடுக்கப்படுகிறது. உடனடியாகவே முடிவு கிடைக்கிறது. குளுக்கோமீட்டரில் எடுக்கப்படுவது மயிர்த் துளைக்குழாய் இரத்தம். இது நாடி இரத்தத்தை ஒத்தது. ஆய்வுக் கூடங்களில் பரிசோதனை செய்வார்கள்.
இதனால் குளுக்கோமீட்டரில் செய்யும்போதும் மருத்துவ ஆய்வுக்கூடத்தில் செய்யும் போதும் கிடைக்கும் இரத்த குளுக்கோஸ் அளவுகளில் சிறிய வேறுபாடுகள் உங்கள் சிகிச்சை முறைகளைப் பாதிக்காது. முதன்முறையாக ஒருவருக்கு நீரிழிவு இருக்கிறதா என நிர்ணயம் செய்வதற்கு ஆய்வுக்கூடங்களில் நாளத்திலிருந்து இரத்தம் எடுத்து பரிசோதனை செய்வார்கள். பின்பு நோயின் அவ்வப்போதைய நிலையை கண்டறிந்து நோயைக் கண்காணிக்க குளுக்கோமீட்டரில் எடுக்கப்படும் மயிர்த் துளைக்குழாய் இரத்தம் போதுமானது.
நன்றி: பசுமை இந்தியா!