மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். நோய் குறைந்து விட்டது என்பதற்காக முன்னதாக நிறுத்தக் கூடாது. இது மீண்டும் அந்த நோய் வரும் வாய்ப்பை அதிகப்படுத்தும்.
பழைய மருந்து வீட்டில் இருந்தால் அதைப் பயன்படுத்தும் முன் மருத்துவருடன் கலந்தாலோசியுங்கள். சில மருந்துகள் பயன்படுத்தத் துவங்கிய சிறிது நாட்களில் வீரியம் இழந்து போகும். எனவே மருத்துவரிடம் அதுபற்றி உரையாடுதல் அவசியம்.
மருத்துவர் பரிந்துரைத்த மருந்தை உட்கொண்டதும் உடல்நிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.
ஒவ்வாமை ஏதேனும் ஏற்பட்டால் அதையும் மருத்துவரிடம் முன்னமே தெரியப்படுத்த வேண்டும். முக்கியமாக பெரியவர்களுக்காய் வாங்கிய மருந்துகளை அதே போன்ற நோய் என்பதற்காக குழந்தைகளுக்குக் கொடுக்கவே கூடாது.
மருத்துவர் நோய்க்கான மருந்துகளை எழுதித் தரும் போது எந்தெந்த மருந்து எதற்குரியது என்பதை கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். மருந்துக் கடைக்காரரிடமும் கேட்டு அதனை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.