உயர் இரத்த அழுத்தம் உள்ளதாக கண்டறியப்பட்டவர்களில் 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் தங்களது இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் உள்ளதா என்பதை அறியாமலேயே இருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
மேலும் பலர் தங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதே தெரிந்திருக்கவில்லை என்று வாஷிங்டனில் வெளியான புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
உயர் இரத்த அழுத்தம் என்பது மாரடைப்பு உள்ளிட்ட பல நோய்களுக்கு அடிப்படையாக அமைகிறது.
உயர் இரத்த அழுத்தம் தொடர்பான விழிப்புணர்வு, சிகிச்சை, கட்டுப்பாட்டில் இரத்த அழுத்தத்தைப் பராமரித்தல் போன்றவை குறித்து வார்விக் மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ப்ராங்கோ கப்புசியோ தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்தக் குழுவினர் மொத்தம் ஆயிரத்து 604 பேரிடம் பூகோளரீதியாக பல இடங்களில் ஆய்வு செய்து அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதில் 24 விழுக்காட்டினருக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதாகவும், அவர்களில் 56 விழுக்காட்டினருக்கு தங்களின் நோய் குறித்து தெரிந்திருக்கவில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உயர் இரத்த அழுத்தம் இருப்பதை அறிந்திருப்பவர்களிலும் பாதியளவினரே அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கான சிகிச்சை குறித்தும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக ப்ராங்கோ தெரிவித்தார்.