வாழைப் பழத்தில் பல வகைகள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு பலன் இருக்கிறது. கிடைப்பதற்கு அரிய பழங்களில் இருக்கும் சத்து கூட வாழைப்பழத்தில் உள்ளது. ஆனால் அதனை பலரும் அறிந்திராமல் உள்ளனர். வயிற்று வலிக்கிறதா, மலச்சிக்கலா உடனே வாழைப் பழத்தை வாங்கி சாப்பிடுகிறோம்.
ரஸ்தாளி சாப்பிட்டால் பித்த நோய்கள் கட்டுப்படும். பேயன் பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புண்ணை ஆற்றும். நேந்திரன் பழம் ரத்த சோகையை குணமாக்கும். மொந்தன் பழம் சாப்பிட்டால் குளிர்ச்சி கிடைக்கும். மலைவாழையை சாப்பிட்டால் உடல் சூட்டை தணித்து பித்தத்தைப் போக்கும்.
செவ்வாழை சாப்பிடுவது ஆண்களுக்கு நல்லது. ஆண்மை பெருகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மலட்டுத் தன்மையைப் போக்கும் சக்தி செவ்வாழைக்கு உள்ளது. குழந்தை இல்லாத தம்பதிகள் செவ்வாழையை சாப்பிட்டு வரலாம்.
கருந்துளுவன் வாழைப்பழத்தில் அதிகளவு அமிலச்சத்து உள்ளது. உடலுக்கு வலு சேர்க்கும். மட்டி ரக வாழைப்பழத்தில் குழந்தைகளுக்குத் தேவையான சத்துக்கள் அதிகம் உள்ளன. மூளையின் நரம்பு வேதியல் கடத்தியான `செரடோனின்' என்னும் ரசாயனப் பொருள், வாழைப்படும் சாப்பிடுவதால் சுரக்கிறது. இதனால் தூக்கம் நன்றாக வரும்.
இரவில் அமைதியான தூக்கம் வருவதற்கு இரவில் உணவு சாப்பிட்ட பிறகு ஒரு வாழைப் பாமும், ஒரு டம்ளர் பாலும் அருந்தினால் உடலுக்கும் நல்லது. உறக்கத்திற்கும் நல்லது.
உடலைத் தேவையான எடையில் வைத்துக் கொள்ள வாழைப்பழம் உதவுகிறது. அதாவது, உடல் மெலிந்தவர்கள் தினமும் இரண்டு வாழைப்பழம் என தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் உடல் பெருக்கும்.
அதே சமயம், பிற உணவுகளை நீக்கிவிட்டு தினமும் ஆறு வாழைப்பழமும், ஆறு டம்ளர் கொழுப்பு நீக்கிய பால் அல்லது மோர் தொடர்ந்து 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைத்து விடலாம். பத்து நாட்களுக்குப் பின்னர், படிப்படியாக பாலின் அளவை குறைத்துக் கொண்டு, பச்சைக் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். வாழைப்பழத்தில் உடலின் எடையை அதிகரிக்கும் சோடியம் அதிகமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாழை மரம், வாழைப்பழம், காய், பூ, இலை மற்றும் தண்டு என அனைத்து பாகங்களிலும் மருத்துவ குணங்கள் இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வியக்கின்றனர்.
வாழையில் பல வகைகள் இருந்தாலும் மொந்தன் ரகத்தைத்தான் பலரும் சமைத்து சாப்பிடுவது வழக்கம். மொந்தன் வாழைக்காயில் இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து காணப்படுகிறது. மெலிந்தவர்கள் இதை அதிகமாக சாப்பிட்டால் உடல் பருக்கும். உடலுக்கும் நல்ல வளர்ச்சி ஏற்படும். அதிக பசியாக இருப்பவர்கள் இதை சாப்பிட்டால் உடனேயே பசி அடங்கும். மொந்தன் வாழைக்காயுடன் மிளகு, சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது.
வாழைக்காயை சமைப்பதற்காக மேல் தோலை அழுத்தி சீவாமல், மெலியதாக சீவினால் போதும். உள்தோலுடன் சமைத்து சாப்பிடுவது நல்லது. கேரளாவில் சீவி எடுத்த தோலையும் நறுக்கி, வதக்கி, புளி மற்றும் மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்து உண்பார்கள். இதுவும் உடலுக்கு நல்லது.