அன்றாட உடற்பயிற்சி, மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் திறன், புகைப்பிடித்தலை தவிர்த்தல் போன்றவை மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள உதவுகின்றன.
மேக்ரோ வாஸ்க்குலார் குறைபாடு அல்லது ஆத்ரோசெலாரோஸிஸ் குறைபாடுதான் வளரும் நாடுகளில் நிகழும் பாதிக்கும் மேற்பட்ட மரணங்களுக்கு காரணம். அதேபோல அமெரிக்காவில் நிகழும் பெரும்பாலான மரணங்களுக்கும் இது முக்கிய காரணியாக உள்ளது. இது படிப்படியாக பெரிய, நடுத்தர அளவிலான இரத்த நாளங்களில் வளர்ச்சியடைகிறது.
ஆத்ரோசெலாரோஸிஸ் என்பது நமது உடலில் உள்ள இரத்த நாளங்கள் மீது ஒரு வகையான பசை ( பிளேக்) ஒரே இடத்தில் சேருவதால் கடினப்பட்டுப் போவது தான். இதனால் உடலின் எந்த பகுதியும் எளிதில் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக கண்டரை அல்லது ஆதார நாடி (அரோட்டா), நெஞ்சுப்பை சுவரின் தசைக்கு இரத்தம் வழங்கும் நாடி (கரோனரி), கழுத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் நாளங்கள் (கரோடிட்), இடுப்பெலும்பு (இலியாக்) உள்ளிட்ட இரத்த நாளங்களை அவ்வப்போது பாதிப்புக்குஉள்ளாக்குகின்றன.
கரோனரி பாதிக்கப்படும் போது நெஞ்சக நோய்கள் ஏற்படுகின்றன. இரத்த நாளங்களின் சுவர்கள் கடினம் அடைவதற்கு காரணம் தாதுப் பொருட்கள் மற்றும் கொழுப்பு பசை வடிவில் ஒரு இடத்தில் சேருவதுதான். இது வீக்கத்தை உருவாக்கும். இதன் விளைவு இருதயத்துக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைகிறது. இதனால் நெஞ்சுவலி அல்லது மாரடைப்பு ஏற்படுகிறது. கடினமான இரத்த நாளங்கள் இரத்த ஓட்டத்தை தடைப்படுத்துவதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.
எல்லா மனிதனின் உடலிலும் ஆத்ரோசெலாரோஸிஸ் நடைப்பெறுகிறது. நூறு வயது வரை வாழும் மனிதனும் இதனாலேயே மரணத்தைத் தழுவுகின்றான். இதன் செயல்பாடு வாழ்க்கையின் தொடக்கத்திலேயே ஆரம்பித்து விடுகிறது. எனவேதான் மருத்துவர்கள் நோய் காரணி மற்றும் குடும்ப வரலாறுகளை தெரிந்து கொள்கின்றனர். ஆஞ்சியோபிளாஸ்டி, பைபாஸ் அறுவை சிகிச்சை மூலம் இது போன்ற இருதயத்தில் ஏற்படும் கோளாறுகள் சரி செய்யப்படுகின்றன.
இருந்தாலும் தற்காப்பு நடவடிக்கையே இந்த நோயிலிருந்து விடுபடுவதற்கான சரியான வழிமுறையாகும். புகைப்பிடித்தல், இரத்தத்தில் அதிக கொழுப்பு இருத்தல், உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்புச் சத்து கொண்ட உணவுப் பொருட்கள், குறைந்த உடற் பயிற்சி ஆகியவைதான் ஆத்ரோசெலாரோஸிஸ், இருதயம் சம்மந்தப்பட்ட நோய்களுக்குகாரணம். மேற்கண்ட காரணிகளில் ஒன்று மற்ற காரணிகளைக் கட்டுப்படுத்த உதவும். உதாரணமாக சீரான தொடர் உடற் பயிற்சி கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், உடல் பருமன், மன அழுத்தத்தின் அளவு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மிகவும் முக்கியமான அதேநேரத்தில் தடுக்க முடிந்த காரணி புகைப் பிடித்தல் பழக்கம்தான்.
நாற்பது வயதுக்கு மேலானவர்கள் இரத்தத்தின் அடர்த்தியைக் குறைக்க குறைந்த அளவு ஆஸ்பிரின் மாத்திரையை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளலாம். முழு ஆரோக்கியத்திற்கு மருத்துவர்கள் அறிவுரைப்படி உடல் நலத்திற்கு உகந்த உணவு வகைகளையும், வாழ்க்கை முறையையும் இப்பாதிப்பு உள்ளவர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
அதோடு நாள்தோறும் உடற்பயிற்சி செய்வது, புகைப்பிடிப்பதை கைவிடுவது, குறைந்த கொழுப்பு சத்து, கொலஸ்ட்ரால் உள்ள உணவு வகைகளை சாப்பிடுவது, சோடியம் உட்கொள்ளும் அளவைக் குறைத்தல், மன அழுத்தத்தை சமன்படுத்துதல் ஆகியவற்றையும் மேற்கொண்டால் இருதயம் தொடர்பான நோய்களுக்கு அஞ்சத் தேவையில்லை.