Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ மனைகளையும், பரிசோதனை நிலையங்களையும் ஒழுங்குமுறைப்படுத்தும் அவசியம்!

Webdunia
வியாழன், 19 ஏப்ரல் 2012 (14:50 IST)
தலைவிரித்தாடும் மருத்துவ உலகம்
எந்தெந்த நோய்களுக்கு எவ்வாறு கட்டணம் வசூலிக்கவேண்டும், தற்போது வசூலிக்கப்படும் தொகைகள் கொள்ளையா? உண்மையில் ஏழை நோயாளிகளை பாதுகாக்கும் சட்ட திட்டங்கள் நாட்டில் உள்ளதா?
இந்திய மருந்து உற்பத்தி மற்றும் வினியோக முறைமைகள் இந்தியாவில் சட்ட ரீதியாகவும் பல்வேறு விதிகள் அடிப்படையிலும் ஓரளவுக்கு ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தங்கள் இஷ்டத்திற்குத் தலை விரித்தாடும் தனியார் மருத்துவமனைகள், மருத்துவர்களிடம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு கொள்ளை அடிக்கும் கிளினிக்கல் லேப்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்த சரியான சட்டதிட்டங்கள் நம் நாட்டில் இல்லை!

நாடுமுழுதும் இயங்கும் ஆயிரக்கணக்கான மருத்துவமனைகள், கிளினிக்கல் லேப்கள் அரசின் நேரரி அல்லது மறைமுக கண்காணிப்பிலோ, அல்லது விதிகளின் கீழோ இயங்குவதில்லை. இது கடந்த பல பத்தாண்டுகளாக இருந்து வருகிறது.

இந்த மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்கல் லேப்கள் அல்லது பரிசோதனை மையங்கள் ஒழுங்கான அற ரீதியான மருத்துவ முறைகளை மேற்கொள்வதில்லை. பலவற்றில் பல விதமான மோசடிகளும், நினைத்துப் பார்க்க முடியாத அளவில் நோயாளிகளைக் கொள்ளை அடிப்பதும், மோசடிகளும் நடைபெற்று வருவது என்பதுதான் இப்போதைய நிதர்சனம்.

இதில் குறிப்பாக நோய்பற்றிய பரிசோதனை மையங்கள், டயாக்னாஸ்டிக் சென்டர்கள் என்று அழைக்கப்படும் பல்வேறு டெஸ்ட்களை எடுக்கும் கிளினிக்கல் லேப்கள் ஆகியவற்றில் என்ன நடைபெறுகிறது என்பதே நாட்டு மக்களுக்கு தெரியாத நிலைதான் நம் நாட்டில் உள்ளது.

பல சமயங்களில் பரிசோதனை மையங்கள் தரும் தவறான டெஸ்ட் ரிப்போர்ட்களின் அடிப்படையிலேயே மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளுக்கான சிகிச்சை மருந்துகளை பரிந்துரை செய்கின்றனர்.

தற்போது உள்ள நிலவரப்படி இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலும் லேப்களின் டெஸ்ட் ரிப்போர்ட்களை கண்காணிக்கும் சரிபார்க்கும் எந்த வித ஒழுங்குமுறை விதிகளோ, சட்டங்களொ இல்லை என்பதே அவலமான ஒரு நிலையாகும்.

எனவே தனியார் மருத்துவமனைகள், கிளினிக்கல் லேப்கள், டெஸ்ட் மையங்கள் ஆகியவற்றை சட்டவிதிகளுக்குள் கொண்டு வந்து அவர்கள் செய்யும் வேலைக்கு அவர்களை பொறுப்பாக்குவதில் மைய அரசு எந்த வித முனைப்பையும் காட்டுவதில்லை. மாநில அரசுகளும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

2010 ஆம் ஆண்டு மைய அரசு கிளினிக்கல் எஸ்டாப்ளிஷ்மென்ட் சட்டம் ஒன்றை இயற்றியது. அதாவது நாடுமுழுதும் ஒரு சீரான தன்மை இருப்பதையும் மோசடி செய்யும் கிளினிகல் லேப்கள், மருத்துவமனைகள் மீது நடவடிக்கை, தண்டனை என்று சட்ட விதிகள் செய்தது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் அருணாச்சல் பிரதேசம், இமாச்சலம், மிஜோரம், சிக்கிம் ஆகிய மாநிலங்களே இந்த சட்ட விதிகளை தங்கள் மாநிலங்களில் அமல் செய்தது.

மற்ற மாநிலங்களில் மருத்துவ அமைப்புகளுக்குத் தொடர்புடைய நிறுவனங்கள் மத்திய அரசின் சட்டத்தை அமல் படுத்த முட்டுக்கட்டை போட்டுஓள்ளது.

ஒரு ஜனநாயக அமைப்பில் தனியார் நெருக்கடிகளுக்கு மாநில அரசுகள் பணிந்து போவது ஏற்றுக்கொள்ள முடியாதது. பொது மக்கள் நலனையும் ஏழை நோயாளிகளையும் மனதில் கொண்டு மருத்துவர்கள் குழாமும் நிறுவனங்களும் தெரிவிக்கும் எதிர்ப்புக்கு மாநில அரசுகள் பணியக்கூடாது என்பதே அறம்.

இந்தச் சட்டத்தின் பிரதான குறிக்கோள் என்னவெனில் அனைத்து கிளினிக்கல் லேப்கள் அது தொடர்பான டெஸ்ட் லேப்களை முதலில் சட்ட ரீதியாக பதிவு செய்வது அவசியம். இதன் மூலம் தேசிய தரவுப்பெட்டகத்தை உருவக்கி கண்காணிக்க முடியும்.

இந்தத் தரவுப்பெட்ட்கத்தின் அடிப்படையிலேயே மருத்துவமனைகளை அதில் உள்ள வசதிகளுக்குக் கேற்ப தரநிலைகளை வகுக்க முடியும்.

தற்போது இந்தியா தரக் குழு மருத்துவமனைகளுக்கும், கிளினிக்குகளுக்கும் 42 புதிய தரநிலைகளை வகுத்துள்ளது.

மாநில அரசுகள் மத்திய கிளினிக்கல் நிறுவனச் சட்டத்தை அமல் செய்ய முடிவெடுத்தாலும் அதன் முக்கிய ஷரத்துகளை அல்லது விதிகளை சீரிய முறையில் நடைமுறைப்படுத்தி ஒழுங்கு முறை செய்யுமா என்பதே கேள்வி!

கல்வி, மருத்துவம், சுகாதாரம் என்று எதையுமே கண்டு கொள்ளாத அரசுகளைத்தான் அதனை உருவாக்கும் அரசியல் கட்சிகளுக்குத்தான் நாம் வாக்களித்து இத்தனை ஆண்டுகாலமாக அழகு பார்த்து வருகிறோம் என்பதே வேதனை கலந்த உண்மை.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments