Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் புகையிலை தடுப்பும், யதார்த்தமும்

-வி. கீதா

Webdunia
சனி, 3 ஜனவரி 2009 (16:46 IST)
புகையிலையை எந்த வடிவத்தில் பயன்படுத்தினாலும் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதே. உலகம் முழுவதும் புகையிலையால் ஆண்டுக்கு 5 கோடியே 40 லட்சம் பேர் உயிரிழப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதேநிலை நீடித்தால் வரும் 2030-ஆம் ஆண்டில் உயிரிழப்பு 10 கோடியை எட்டும் என்றும், இந்த உயிரிழப்புகளை முற்றிலுமாகத் தடுக்க முடியும்.

இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 9 லட்சம் பேர் புகையிலை தொடர்பான நோய்களால் உயிரிழக்கிறார்கள். உலகிலேயே இந்தியாவில்தான் வாய் புற்றுநோயாளிகள் அதிகம். 90 விழுக்காடு வாய்ப்புற்று நோய் புகையிலையால் வருகிறது. இந்தியாவில் ஏற்படும் அனைத்து விதமான புற்றுநோய்களில் 40 விழுக்காடுபுகையிலையால் உண்டாகிறது.

புகையிலையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்களையும், உயிரிழப்புகளையும் உணர்ந்த உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization), கடந்த 2003ஆம் ஆண்டு மே 21ஆம் தேதியன்று புகையிலை கட்டுப்பாட்டுக்கான கட்டமைப்பு பிரகடனம் ஒன்றை கொண்டு வந்தது.

உலகிலேயே இதுதான் உடல் நலம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட முதல் பிரகடனம் ஆகும். இந்தியா இதன் கூறுகளை இறுதி செய்வதில் முக்கிய பங்கு வகித்தது. மேலும் இதற்கான தெற்காசிய நாடுகளின் மண்டல ஒருங்கிணைப்பாளராகவும் இந்தியா பொறுப்பேற்றது.

இந்தப் பிரகடனத்திற்கு முன்பே புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தை 2003, மே 18ஆம் தேதி இந்தியா இயற்றியது. பிரகடனத்தில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் இச்சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

இந்தியா 2004 பிப்ரவரி 5-ம் தேதியன்று புகையிலை கட்டுப்பாட்டுக்கான கட்டமைப்பு பிரகடனத்தில் கையெழுத்திட்டது. இதில் இடம் பெற்றுள்ள அனைத்து அம்சங்களையும் செயல்படுத்த முடிவெடுத்தது.

புகையிலை கட்டுப்பாட்டுச் சட்டம் 2003 :

சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் (விளம்பரத்தை தடை செய்வது மற்றும் விற்பனை, வர்த்தகம், உற்பத்தி, விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது) சட்டம் 2003 புகையிலையின் அனைத்து வடிவங்களுக்கும் - சிகரெட், சிகார், சீரூட்ஸ், பீடி, குட்கா, பான்மசாலா, கைனி, மாவா, மிஷ்ரி, ஸ்னப் - பொருந்தும். இச்சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படுகிறது.

முக்கிய கூறுகள் :

பொது இடங்களில் புகை பிடிப்பது, புகையிலைப் பொருட்களை விளம்பரப்படுத்துவது, மைனர் குழந்தைகளுக்கு புகையிலைப் பொருட்களை விற்பது, கல்வி நிறுவனங்களுக்கு அருகே புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது ஆகிய அனைத்தும் தடை செய்யப்படுகின்றன. புகையிலைப் பொருட்களின் பாக்கெட் மீது புகைப்பட எச்சரிக்கை விடுப்பது, புகையிலைப் பொருட்களில் உள்ள தார் மற்றும் நிக்கோடின் பொருட்களை ஒழுங்குபடுத்துவது ஆகியவையும் இச்சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை :

அனைத்து பொது இடங்களிலும் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அரங்குங்கள், மருத்துவமனை கட்டிடங்கள், ரயில்வே காத்திருப்பு அறை, சொகுசு விடுதிகள், உணவு விடுதிகள், அரசு அலுவலகங்கள், நீதிமன்ற வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், நூலகங்கள், பொது போக்குவரத்து வாகனங்கள் ஆகிய அனைத்தும் பொது இடங்களில் அடங்கும்.

உணவு விடுதிகள், சொகுசு விடுதிகள், விமான நிலையங்கள் ஆகியவற்றில் புகை பிடிப்பதற்கென தனி அறையை ஏற்படுத்தவும் இச்சட்டம் வகை செய்கிறது. ஆனால் இப்புகை மற்ற இடங்களுக்கு பரவக் கூடாது. அனைத்து பொது இடங்களிலும் புகை பிடிப்பதை தடை செய்யும் சித்திர குறியீடுகளை நன்கு தெரியுமாறு வைக்க வேண்டும். தடையை மீறி புகை பிடிப்போர் மீது சட்டப்படி அபராதம் விதிப்பதுடன் நடவடிக்கையும் எடுக்க வேண்டும். அனைத்து பொது இடங்களிலும் புகையில்லா இடம் - இங்கு புகை பிடிப்பது குற்றமாகும் என்ற வாசகங்கள் அடங்கிய எச்சரிக்கை அட்டைகளை ஆங்காங்கே வைக்க வேண்டும். இந்த விதிகள் சென்ற அக்டோபர் 2ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்துள்ளன.

அமலாக்க அதிகாரிகள் :

கலால் வரி, வருமான வரி, சுங்க வரி, விற்பனை வரித் துறை ஆய்வாளர்கள், சுகாதாரம் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்கள் ஆகியோர் தமது வரம்புக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் புகை பிடிப்பதை தடுக்க வேண்டும். இதே போன்று ரயில் நிலைய அதிகாரி, மத்திய மற்றும் மாநில கெசடட் அதிகாரிகள், அஞ்சல் துறை அதிகாரிகள், கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், ஆசிரியர்கள், நூலகர்கள், விமான நிலைய மேலாளர் மற்றும் பிற அலுவலர்கள், பொது சுகாதார இயக்குனர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், புகையிலை தடுப்பு மைய அதிகாரிகள் உள்ளிட்ட பலரை இச்சட்டம் வகைப்படுத்தியுள்ளது.

நமது நாட்டில் மக்களின் உடல் நலனுக்கு பெரிதும் கேடு விளைவிக்கும் புகையிலை பழக்கத்தை தடுக்க, சட்டங்கள், தேசிய புகையிலை கட்டுப்பாட்டுத் திட்டம் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் சில முரண்பாடுகளும் நெருடத்தான் செய்கின்றன.

புகையிலை பழக்கத்தைத் தடுக்க கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் இவ்வேளையிலும் மத்திய அரசின் நிறுவனமான தேசிய புகையிலை ஆராய்ச்சி நிறுவனம் இன்னும் செயல்பட்டு வருகிறது.

பீடி தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு நலத்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நமது நாட்டில் புகையிலை உற்பத்தி இன்னும் சட்டரீதியாக தடை செய்யப்படவில்லை என்ற பதில் கிடைக்கிறது. புகையிலை பணப்பயிராக பாட புத்தகங்களில் இடம் பெற்று வருகிறது. நமது நாட்டில் 4 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் புகையிலை பயிராகிறது. தமிழ்நாட்டில் 15 ஆயிரம் ஹெக்டேரில் புகையிலை பயிர் செய்யப்படுகிறது. நமது நாட்டின் வருடாந்திர புகையிலை உற்பத்தி 700 மில்லியன் கிலோ ஆகும்.

தமிழ்நாட்டில் 35 மில்லியன் கிலோ புகையிலையை ஆண்டுதோறும் உற்பத்தி செய்கிறது. சீனா, பிரேசிலுக்கு பிறகு இந்தியா புகையிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் மூன்றாவது பெரிய நாடாக இடம் பெறுகிறது.

புகையிலையால் ஆண்டுக்கு ரூ.2000 கோடி அன்னியச் செலாவணியாகவும், ரூ.10 ஆயிரம் கோடி கலால் வருவாயாகவும் கிடைக்கிறது. புகையிலையினால் 3 கோடியே 60 லட்சம் பேர்வேலை வாய்ப்பு பெறுகின்றனர். 60 லட்சம் விவசாயிகள் புகையிலை பயிரிடுகிறார்கள். இந்தியாவில் 4.4 கோடி பேர் பீடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

பீடி தொழில் தொடர்பான பணிகளில் 40 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். நாட்டிலேயே பீடி தொழிலாளர் எண்ணிக்கையில் தமிழ்நாடு இரண்டாம் இடம் வகிக்கிறது. உலக பீடி உற்பத்தியில் 85 சதவீதம் இந்தியாவில்தான் உற்பத்தியாகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் 80 கோடி பீடிகள் விற்பனையாகின்றன.

மேற்கூறிய உண்மைகள், இந்தியாவில் இருந்து புகையிலையை ஒழிப்பது ஒரே நாளில் நடந்துவிடும் காரியமல்ல என்பதை அழுத்தமாக சொல்கின்றன. மத்திய புகையிலை ஆராய்ச்சி நிறுவனம் புகையிலை பயிரிடும் விவசாயிகளுக்கு மாற்றுப் பயிர் பயிரிட ஆலோசனை அளித்து வருகிறது. மாற்றுப் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை அளிக்கும் திட்டத்தையும் செயல்படுத்தவுள்ளது.

இதேபோன்று பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்களை வேறு தொழில்கள் ஈடுபடவும் அரசு ஊக்குவித்து வருகிறது. அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

புகையிலை என்னும் கொடிய அரக்கனை எதிர்த்துப் போராட மத்திய, மாநில அரசுகளுடன் தன்னார்வ அமைப்புகள், பொது மக்கள், பிற அரசுத் துறைகள் என அனைவரும் கைகோர்க்க வேண்டும். இதன்மூலம் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவோம்.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments