விமான எரிபொருள் மீதான வரியைக் குறைக்க முடியாது என்று மாநில அரசுகள் மறுத்துள்ளன.
விமான நிறுவனங்களின் மொத்த நிர்வாகச் செலவில் 40 சதவீதம் அளவுக்கு வரியாக செலுத்தப்படுகிறது. இதனால், விற்பனை வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் இதை ஏற்க மாநில அரசுகள் மறுத்துள்ளன.
விமான எரிபொருளை, மதிப்பு கூட்டு வரி விதிப்புப் பட்டியலில் கொண்டு வர வேண்டும் என விமான நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. அவ்வாறு கொண்டு வரும் பட்சத்தில் அதற்கும் 4 சதவீதம் வரி விதிக்க வாய்ப்புள்ளது.
தற்போது விமான எரிபொருளுக்கான வரி விதிப்பு மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. ஆந்திராவில் 30 சதவீதமும், பல மாநிலங்களில் இதற்கு அதிகமாகவும் வரி விதிக்கப்படுகிறது.
இதுகுறித்து முடிவு செய்வதற்காக கடந்த 10 தினங்களுக்கு முன்பு அமைச்சர்கள் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இந்நிலையில் மாநில அரசுகள் தற்போது தங்களது மறுப்பை வெளியிட்டுள்ளன.
இந்த தகவலை மதிப்பு கூட்டு வரி (வாட்) குழுவின் தலைவர் அசிம் தாஸ் குப்தா தெரிவித்துள்ளார்.