பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அத்தியாவசியப் பொருட்களின் மீது விதிக்கப்படும் நுழைவு வரி, சந்தை வரி உள்ளிட்ட உள்ளூர் வரிகள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
புதுடெல்லியில் மாநில அரசுத் தலைமை செயலர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய பிரதமர், “சந்தை வரி, நுழைவு வரி, உள்ளூர் வரிகள் ஆகியவற்றை நீக்க வேண்டும் என்ற வலிமையான கோரிக்கை இருந்து வருகிறது. நமது நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருந்தாலும், பணவீக்கம் ஒரு பெரும் தடையாய் இருந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த உள்ளூர் வரிகளை நீக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் உணவுத் தேவையை கருத்தில் கொண்டு தற்போதுள்ள அமைப்பை மிகப் பெரிய அளவிற்கு மாற்றி அமைக்க வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.