மக்களவையில் நேற்ரு நிறுவனங்கள் மசோதா மறு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம் 52 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள நிறுவன மசோதா காலாவதியாகும்.
புதிய மசோதா நிறுவனங்களை கையகப்படுத்துவது, ஒரே குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்களை ஒன்றிணைப்பது ஆகியவை எளிதாக மேற்கொள்ள முடியும்.
14 ஆவது மக்களவையின் காலம் முடிந்ததைத் தொடர்ந்து, நிறுவனங்கள் மசோதா-2008 காலாவதியானது. இதனால் இந்த மசோதா மறு அறிமுகம் செய்யப்படுவதாக நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் தெரிவித்தார்.
இதில் நிறுவனங்களின் சட்ட விதிமுறைகள் வெகுவாகக் குறைக்கப்பட்டு, அந்தந்த துறைகளுக்கேற்ப எளிமையாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மசோதாவில் 480 விதிகள் உள்ளன. முந்தைய மசோதாவில் 600 விதிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. முந்தைய மசோதா 1956 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.
இந்த புதிய மசோதாவில் நிறுவனத்தில் முதலீடு செய்யும் பங்குதாரர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. நிறுவன இயக்குநர் கூட்டத்தில் சிறுபான்மை பங்குகளைக் கொண்ட பங்குதாரர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அத்துடன் இயக்குநர் குழு சுதந்திரமாக செயல்படுவதோடு அரசின் கட்டுப்பாடு மிகக் குறைவாக இருக்கும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் 33 சதவீதம் சுயேச்சையான இயக்குநர்கள் இடம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் முக்கிய குறிக்கோள் நிறுவன விதிமுறைகளை எளிமையாக்குவதுதான் என்று சல்மான்குர்ஷீத் கூறினார்.