டிசம்பர் 31-க்குள் சேவை வரியை செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை - ப.சிதம்பரம் எச்சரிக்கை!
, வியாழன், 5 டிசம்பர் 2013 (18:59 IST)
டிசம்பர் மாதம் 31 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டிய சேவை வரியை அனைவரும் செலுத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்றும் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.
அனைவரின் நலன் கருதியும் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி மற்றும் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் என இரு தவனைகளாக சேவை வரி செலுத்தலாம் என மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு வர்த்தகர்கள் மற்றம் தொழில் நிறுவனங்களை சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார்.கடந்த 1997 ஆம் ஆண்டு இத்தகைய நடவடிக்கையை கொண்டு வரப்பட்டபோது 17 லட்சம் பேர் சேவை வரியை செலுத்தினர். எனினும் அவர்களில் 7 லட்சம் பேரை தவிர, இதர 10 லட்சம் பேர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சேவை வரி செலுத்துவதையே முற்றிலுமாக விட்டுவிட்டனர். அத்தகைய நிலை தற்போது ஏற்பட்டு விட கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது என்று நிதி அமைச்சர் சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார். வரியை செலுத்தாவிட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.