டாடா மோட்டார் நிறுவனத்தினரால் குறைந்த விலையில் தயாரிக்கப்பட்ட நானோ கார், நேற்று முதல் சென்னையில் ஓடத் துவங்கியது.
உலகிலேயே குறைந்த விலை காரான நானோ ரக காரை, டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா மோட்டார் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கு முன் பதிவு செய்தவர்களில், குலுக்கல் முறையில் கார் ஒதுக்கீடு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்க நானோ கார் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கிண்டியில் உள்ள கான்கார்ட் மோட்டார்சில் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு, முதல் காருக்கான சாவியை அதன் உரிமையாளர்
வடிவாம்பாள் கந்தசாமியிடமும், 2-வது காருக்கான சாவியை அதன் உரிமையாளர் ஆர்.விஜயகுமா
ரிடமும் வழங்கினார்.
முதல் நானோ காரை பெற்ற வடிவாம்பாள் கந்தசாமியின் மகள் காயத்ரி நிருபர்களிடம் கூறும்போது, நிறைய பேர் காருக்காக
முன்பதிவு செய்திருந்த போதிலும், எங்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிர்ஷ்டம் அடித்ததாகத்தான் சொல்வேன் என்று கூறினார்.
இரண்டாவது காரை பெற்ற விஜயகுமார் நிருபர்களிடம் கூறும்போது, பல்லாவரத்தில் வசித்து வரும் நான், கிண்டியில் சிறுதொழில் நிறுவனம் நடத்தி வருகிறேன். நானோ காருக்கு கடைசி நாளில், இறுதி நேரத்தில் தான் விண்ணப்பித்தேன். பாரத ஸ்டேட் வங்கியில் கடனுக்கும் விண்ணப்பித்து இருந்தேன். கடைசி நேரத்தில் முன்பதிவு செய்த எனக்கு, முதலாவதாக கார் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்.
`நானோ' கார் விற்பனை அதிகாரி கூறும்போது, இந்தியா முழுவதும் நானோ காருக்காக 2 லட்சத்து 3 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். அடுத்த 18 மாதத்தில் ஒரு லட்சம் பேருக்கு நானோ கார் விநியோகிக்கப்பட உள்ளது. முதல் குலுக்கலில் சென்னைக்கு 100 கார்கள் கிடைத்துள்ளது. ஆகஸ்டு மாதத்திற்குள் 38 கார்கள் வழங்கப்படும். அதனைத்தொடர்ந்து மீதம் உள்ள கார்கள் கொடுக்கப்படும். அடுத்த ஓராண்டில் சென்னையில் 7,500 நானோ கார்கள் ஓடும் என்று தெரிவித்தார்.
நானோ கார் 3 மாடல்களில் கிடைக்கிறது. இதன் சென்னை விலை நானோ ஸ்டேண்டர்டு காரின் விலை ரூ.1,46,000, நானோ சி.எக்ஸ். ரூ.1,70,000, நானோ எல்.எக்ஸ். ரூ.2,06,000.