சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடுக்கு அனுமதி தந்துள்ள மத்திய அரசின் முடிவு உற்பத்தியை அதிகரிக்கவும், உயர்ந்து வரும் உணவு விலைகளை சமாளிக்கவும் உதவும் என ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் சுபிர் கோகர்ன் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தென் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை சேம்பரின் 102வது விழாவில் கலந்து கொண்ட ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் சுபிர் கோகர்ன் பேசுகையில்,
உணவுப் பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டுவந்து எளிமையான மக்களும் உபயோகிக்கும் அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்த ஒரே தீர்வு உணவு பொருட்களின் உற்பத்தியை முதலில் அதிகரிக்க வேண்டும்.
சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டின் நன்மை தீமைகள் குறித்த விவாதம் நடந்து வந்தாலும், நாம் அடிப்படை பிரச்சனைகளில் கவனம் கொள்ள வேண்டியது அவசியம்.
முதலில் உற்பத்தி மற்றும் விநியோக திறனை அதிகரிக்க வேண்டும். இந்தியாவில் தானியங்களின் உற்பத்தி மற்றும் விநியோகம் திறனற்ற நிலையில் உள்ளது.
சில்லறை முதலீடுகளின் அளவை அதிகரிப்பதே உற்பத்தி மற்றும் விநியோக திறனை அதிகரிப்பதற்கான ஒரே வழியாகும். அதற்கு அன்னிய நேரடி முதலீடு திட்டமே ஆக்கபூர்வமான ஒன்று என அவர் கூறியுள்ளார்.