ஆடிப்பெருக்கையொட்டி காவிரியில் இன்று பக்தர்கள் புனித நீராடினர். புதுமண தம்பதிகள் தங்கள் மாங்கல்யம் நிலைக்கவும், கன்னி பெண்கள் திருமண வரம் வேண்டி இறைவனை வழிபட்டனர்.
தமிழகத்தில் இன்று ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் பவானி, காவிரி, அமிர்தநதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் பவானிகூடுதுறையில் உள்ள சங்கமேஸ்வரர் கோவிலில் 20,000க்கும் அதிகமாக பொதுமக்கள் கூடி புனித நீராடினர்.
ஏராளமான புதுமணத்தம்பதிகள் ஆற்றில் புனித நீராடியதோடு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்களகரமான பொருட்களோடு சிறப்பு வழிபாடு நடத்தினர். இல்லத்தரசிகளும் தங்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டி வழிபாடு செய்தனர்.
கன்னிப்பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து கைகளில் மஞ்சள் கயிறுகளை கட்டிக்கொண்டார்கள்.
வீடுகளில் விரதமிருந்து பெண்கள், முளைப்பாரியை கைகளில் ஏந்திக் கொண்டு காவிரி ஆற்றுக்கு வந்தார்கள். எல்லா வளமும் பெருக வேண்டும் என்று இளம்பெண்கள் பூஜை செய்து முளைப்பாரியை காவிரியில் விட்டுவிட்டு கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.
விவசாயம் செழிக்க வேண்டி விவசாயிகள் காவிரி அன்னைக்கு மலர் தூவி வணங்கினார்கள். மேட்டூர், ஒகேனக்கல்லில் ஏராளமான புதுமணத் தம்பதிகள் புனித நீராடியதோடு, மங்களகரமான பொருட்களோடு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
இதேபோல் திருவாரூர், நாகை, தஞ்சை ஆகிய மாவட்டத்தில் காவிரி ஆறு செல்லும் இடங்களில் எல்லாம் ஆடிப்பெருக்கு விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.