வனங்களின் பாதுகாப்பை பராமரித்து, அதை விரிவுப்படுத்தும் மாநிலங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.
பருவநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கு உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடந்தது. இதில் கலந்துக்கொண்டு ஜெய்ராம் ரமேஷ் பேசியதாவது:
பல மாநிலங்களில் வனப்பகுதியை மேம்படுத்துவதிலும், பாதுகாப்பதிலும் பணம் செலவிடுவதில் சிரமப்படுகின்றன.
இதுபோன்ற சுமைகளை கருத்தில் கொண்டு, வனத்தை பாதுகாப்பதிலும், பராமரிப்பதிலும், வனப் பகுதியை விரிவுப்படுத்துவதிலும் கூடுதல் அக்கறை காட்டும் மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
நிதி மற்றும் திட்டக் கமிஷன், இந்த ஊக்கத்தொகையை வழங்கும். இதன் மூலம் வனப்பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.