சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைப்பதற்கு நிலம் கொடுத்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று தமிழக அரசு நேற்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் கூறியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், தென்மாவட்டங்களில் ரூ.50 கோடிக்கு மேல் முதலீடு செய்தால் அரசு ஏராளமான சலுகைகள் வழங்குகிறது. தென்மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியை கருத்தில்கொண்டு அரசு செயல்படுத்தி வரும் இந்த திட்டத்தின் விளைவாக திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் ஏ.டி.சி. டயர்ஸ் நிறுவனம் டயர் தொழிற்சாலையை அமைத்து வருகிறது.
மேலும் அங்கு டி.வி.எஸ்., ஸ்ரீசக்ரா டயர்ஸ், எல்.ஜி. டிரெட் போன்ற முன்னணி டயர் தயாரிப்பு நிறுவனங்களும் தங்கள் தொழிற்சாலைகளை தொடங்க முன்வந்துள்ளன. இதேபோல், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் கெப்பாரோ என்ஜினீயரிங், பென்னர் இந்தியா நிறுவனங்களும் தொழிற்சாலைகள் தொடங்க உள்ளன.
தொழிலாளர்கள் அதிகமுள்ள இடங்களான ஸ்ரீபெரும்புதூரிலும், திருப்பூரிலும் தலா ஆயிரம் ஆயிரம் பேர் தங்குவதற்கான வசதிகளுடன் தங்குமிடங்கள் அமைக்கப்படும்.
சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைப்பதற்காக ஒரு ஏக்கருக்கு கூடுதலாக நிலம் கொடுத்த குடும்பங்களில் குறைந்தபட்சம் ஒருவருக்காவது அந்த பகுதியில் அமைக்கப்படும் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு வழங்குவதற்கு அரசு உறுதியாக ஆவன செய்யும். இதற்காக தொழிற்பூங்காக்களில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் அமைத்து, நìலம் கொடுத்த குடும்பங்களில் உள்ள இளைஞர்களின் திறனை மேம்படுத்த சிப்காட் பயிற்சி அளிக்கும் என்று கூறப்பட்டது.