ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கான சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வில் சென்னையில் சைதை துரைசாமி நடத்தும் மனிதநேய அறக்கட்டளையில் பயிற்சி பெற்ற 34 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.
சென்னையில் சைதை துரைசாமியை தலைவராக கொண்ட மனிதநேய அறக்கட்டளை பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் இருந்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இலவச தங்கும் வசதி, படிக்கும் வசதி, போக்குவரத்து வசதி, உணவு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அளித்து சென்னையில் இலவசமாக பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார்கள்.
கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் இறுதி தேர்வில் மனிதநேய அறக்கட்டளையில் பயிற்சி பெற்ற 12 பேர் தேர்வு பெற்று பணிக்கான பயிற்சி பெற்று வருகிறார்கள்.
இந்த ஆண்டு இந்த அறக்கட்டளையில் 110 பேர் பயிற்சி பெற்றனர். அவர்களில் தற்போது அறிவிக்கப்பட்ட முதன்மை தேர்வில் 34 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் பெண்கள்.
இறுதியாக நடத்தப்படும் நேர்முக தேர்விலும் அவர்கள் அனைவரையும் தேர்வு பெற செய்வதற்கான எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவர்கள் மட்டுமல்லாமல் முதன்மை தேர்வில் வெற்றி பெற்று, இங்கு பயிற்சி பெறாத மற்ற மாணவர்களும் இந்த இலவச இறுதி பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மனிதநேய அறக்கட்டளையின் தலைவர் சைதை துரைசாமி, பயிற்சி மைய இயக்குனர் மா.வாவூசி ஆகியோர் தெரிவித்தனர்.