Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நானோ தொழில்நுட்ப துறையில் லட்சக்கணக்கில் வேலைவாய்ப்பு: கான்பூர் ஐ.ஐ.டி. தலைவர்

நானோ தொழில்நுட்ப துறையில் லட்சக்கணக்கில் வேலைவாய்ப்பு: கான்பூர் ஐ.ஐ.டி. தலைவர்
சென்னை , செவ்வாய், 6 அக்டோபர் 2009 (15:22 IST)
இன்னும் 5 ஆண்டுகளில் நானோ தொழில்நுட்பத் துறையில் லட்சக்கணக்கில் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று கான்பூர் ஐ.ஐ.டி. தலைவர் அனந்தகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு நானோ தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான 4 நாள் பயிற்சி முகாமை, சென்னை கிண்டியில் உள்ள தமிழக அரசின் நிறுவனமான அறிவியல் நகரம் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இதன் தொடக்கவிழா நேற்று அறிவியல் நகரில் நடந்தது. இதில் கான்பூர் மற்றும் ராஜஸ்தான் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.அனந்தகிருஷ்ணன் பயிற்சி முகாமை துவக்கி வைத்துப் பேசினார்.

அப்போது, நானோ தொழில்நுட்பம் அனைத்து துறைகளையும் ஆக்கிரமிக்கக் கூடியதாக உருவாகி வருகிறது. அறிவியல் துறையில் எதிர்காலத்தில் வேறொரு புதிய துறை உருவாக வாய்ப்பு இல்லை என்று சொல்லும் அளவுக்கு இதன் வளர்ச்சி பிரமிக்கத்தக்கதாக உள்ளது.

அதிக சக்திவாய்ந்த பொருட்களை மிகச்சிறியதாக உருவாக்குவதுதான் நானோ தொழில்நுட்பத்தின் அடிப்படை ஆகும். கடந்த 1960களில் கம்ப்யூட்டர் என்றால் ஒரு பெரிய அறை அளவுக்கு இருந்தது. ஆனால், இன்று அதன் உருவம் மேஜை மீது வைக்கக்கூடிய அளவுக்கு சிறிதாக்கப்பட்டுவிட்டது. எனினும் அதன் செயல்திறன் பலமடங்கு கூடியிருக்கிறது.

செல்போன் வந்தபோது அதன் எடை அதிகமாக இருந்தது. ஆனால், இன்று அதிக செயல்திறனுடன் மிகச்சிறிய அளவிலான செல்போன்கள் வந்துவிட்டன. இதுபோல் எதிர்காலத்திலும் நானோ தொழில்நுட்பத்தால் இன்று மக்கள் பயன்படுத்தும் பல உபகரணங்களின் உருவம் மேலும் சிறிதாக்கப்படும் என்று விளக்கினார்.

தொடக்கவிழா முடிவடைந்த பிறகு கான்பூர் ஐ.ஐ.டி. தலைவர் அனந்தகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தகவல் தொழில்நுட்பத் துறையில் எப்படி 10 லட்சம், 20 லட்சம் என்று வேலைவாய்ப்புகள் ஏற்பட்டதோ அதைப் போன்று நானோ தொழில்நுட்ப துறையிலும் அடுத்த 5 ஆண்டுகளில் லட்சக்கணக்கிலான வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்த துறையின் வளர்ச்சிக்கு தேவையான ஆய்வக வசதிகளை மத்திய, மாநில அரசுகளும், தனியார் துறையினரும் செய்து கொடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

Share this Story:

Follow Webdunia tamil