Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேலை வாய்ப்புகளைத் திருடவில்லை: பிரதமர்

வேலை வாய்ப்புகளைத் திருடவில்லை: பிரதமர்
, செவ்வாய், 9 நவம்பர் 2010 (14:23 IST)
இந்தியாவின் வணிக அயல் பணி நிறுவனங்களை பெருமையாக கருதுவதாகக் கூறிய பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்கப் பணிகளை இந்தியர்கள் செய்ததால் அந்த நிறுவனங்களின் திறன் மேம்பட்டது என்றும், அயல் பணி மூலம் நாம் அமெரிக்கர்களுக்குக் கிடைக்க வேண்டிய பணி வாய்ப்புக்களைத் திருடவில்லை என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் ஹைதராபாத் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அவருடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தபோது பிரதமர் மன்மோகன் சிங் இவ்வாறு கூறியுள்ளார்.

“வணிக அயல் பணி நிறுவனங்களால் இந்தியா பெருமைப்படுகிறது. அதனால் அமெரிக்க நிறுவனங்களின் உற்பத்தித் திறன் அதிகரித்தது. ஆனால் இதன் மூலம் அமெரிக்கர்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புக்களை இந்தியா திருடவில்லை” என்று கூறினார்.

“இந்தியா என்றால் கால் செண்டர்கள், அமெரிக்காவின் கிளைகள் இயங்குமிடம் என்ற எண்ணம் காலம் கடந்ததாகிவிட்டது. இந்தியாவுடனான ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவில் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகியுள்ளது என்று நான் திரும்பிச் சென்று கூறப்போகிறேன்” என்று பராக் ஒபாமா கூறினார்.

இந்தியா தொடர்பாக எல்லாவிதமான தற்காப்புக் கொள்கைகளையும் கைவிடப்போவதாக பராக் ஒபாமா கூறியுள்ளது நம்பிக்கையளிக்கிறது என்று கூறியுள்ள இந்திய மென்பொருள் நிறுவனங்களின் கூட்டமைப்புத் (நாஸ்காம்) தலைவர் சோம் மிட்டல், “ஒபாமாவின் வாக்கு அடுத்த சில மாதங்களில் நடைமுறையாக வேண்டும். அமெரிக்காவில் பணியாற்றச் செல்லும் இந்தியர்கள், அந்நாட்டின் சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்காக ஊதியம் பிடித்தம் செய்யப்படுவதில் இருந்து காத்துக்கொள்ள டோட்டலைசேஷன் அக்ரிமெண்ட் பற்றி பேசவில்லை. அதனைத் துவக்க வேண்டும்” என்று கூறினார்.

ஹெச் 1 பி விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றச் செல்லும் இந்தியர்கள் அந்நாட்டின் சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கான பங்காக தங்கள் ஊதியத்தில் 20 முதல் 25 விழுக்காடு இழக்கின்றனர். அங்கு 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினால்தான் இவ்வாறு பெறப்பட்ட பங்கை இந்தியாவிற்கு கொண்டுவர இயலும். ஆனால் பெரும்பான்மை ஹெச் 1 பி விசா பெற்று பணியாற்றச் செல்பவர்கள், அங்கு ஐந்தாறு ஆண்டுகள் மட்டுமே பணியாற்றிவிட்டுத் திரும்புவதால், அவர்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட அத்தொகை அமெரிக்காவின் கருவூலத்திற்குச் சென்று விடுகிறது.

இதனைத் தவிர்க்க அமெரிக்காவுடன் டோட்டலைசேஷன் அக்ரிமெண்ட் போடப்படும் என்று கடந்த செப்டம்பரில் வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா உறுதி கூறினார். ஆனால் அது குறித்து ஒபாமாவின் பயணத்தில் எதுவும் பேசப்படவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil