ராகுல் காந்தி முரண்பாடானவர் - நிதிஷ் குமார்
, வெள்ளி, 7 பிப்ரவரி 2014 (15:17 IST)
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சிலும், செயலிலும் முரண்பாடு உள்ளது என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக பீகார் தலைநகர் பாட்னாவில் அவர் அளித்த பேட்டி:-
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சிலும், செயலிலும் அதிக முரண்பாடுகள் உள்ளன. இதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடன், காங்கிரஸ் கூட்டணி வைப்பதற்கு, ராகுல் அளிக்கும் விளக்கத்தை ஏற்க முடியாது. இரு கட்சிகள் இடையே ஏற்படும் கூட்டணியில் ஆச்சர்யம் இல்லை. ஐ.மு கூட்டணியின் முதல் ஆட்சியில் லாலு கட்சி அங்கம் வகித்தது. 2வது ஆட்சியில் வெளியில் இருந்து ஆதரவு அளித்தது. அதனால் இந்த கூட்டணி எதிர்பார்த்ததுதான். ஊழல் விஷயத்தில் சமரசம் கிடையாது என ராகுல் கூறுகிறார். ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசே ஊழலில்தான் நடந்தது. ஐ.மு கூட்டணி ஆட்சியில் ஊழலும், விலைவாசியும் அதிகரித்ததால்தான், கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த ஆதரவு குறைந்தது.
ஊழலையும், விலைவாசி உயர்வையும் அவரால் கை கழுவிவிட முடியாது. இந்த துயரங்களுக்கு மக்கள் ராகுலை பொறுப்பேற்கச் செய்வர். ராகுல் முரணானவர் மட்டும் அல்ல, திடீரென தனது நிலையை மாற்றக் கூடியவர். கிரிமினல் குற்றங்களில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களை காப்பாற்ற மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.