பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக பா.ஜ.க. வலுவான அணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இந்த கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக, இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்தன.
பாட்டாளி மக்கள் கட்சி 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது. அந்த தொகுதிகளில் சிலவற்றை தேமுதிக கேட்டதாலும், இதர சில தொகுதிகளை கூட்டணி கட்சிகள் இடையே பிரித்துக்கொள்வதில் சிக்கல் நீடித்தது. தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதற்காக தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதர ராவ் மற்றும் தமிழக பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் பல்வேறு கட்டமாக நடத்திய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு காண முடியவில்லை.
இதற்கிடையே தேமுதிக தலைவர் விஜயகாந்த் 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து, திருவள்ளூர், வட சென்னை, ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் பிரச்சாரம் மேற்கொண்டார். இது பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது.