டெல்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் 48 நாட்கள் பரபரப்பான ஆட்சி நடத்திய ஆம் ஆத்மி கட்சி அரசு, ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்ற ஆதரவு கிடைக்காததால் பதவி விலகியது. அதன் தாக்கம் மறைவதற்குள், வருகிற நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கான வியூகம் வகுப்பதில் அந்த கட்சி தீவிரம் காட்டியது.
கட்சித்தலைவர் கெஜ்ரிவால் வீட்டில் ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 20 வேட்பாளர்களைக்கொண்ட முதல் பட்டியல் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் துணைத்தலைவரும், அந்த கட்சியின் பிரதமர் வேட்பாளர் என்று கருதப்படுபவருமான ராகுல் காந்தியை எதிர்த்து உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில், குமார் விஸ்வாஸ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மராட்டிய மாநிலம் நாக்பூர் தொகுதியில், பா.ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் நிதின் கட்காரியை எதிர்த்து முன்னாள் வங்கி அதிகாரி அஞ்சலி தமானியா களம் இறங்குகிறார்