இந்த கூட்டத்தில் மோடி பேசியதாவது:-
இந்திய விடுதலைக்கு பின்னர் நாட்டில் எத்தனையோ தேர்தல்கள் நடந்திருக்கலாம். ஆனால், 2014- பாராளுமன்ற தேர்தல் என்பது நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான தேர்தல் என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது.
இந்தியாவின் வரலாற்றில் இதுவரை நிகழ்ந்திராத பல பெரும் ஊழல்கள் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் அரங்கேறி உள்ளது. இதுபோன்ற ஊழல்கள் இந்திய வரலாற்றில் இடம்பெற்றதே இல்லை.
காங்கிரஸ்காரர்கள் கட்சியை காப்பாற்ற நினைக்கிறார்கள். மாறாக, நாங்களோ... நாட்டை காப்பாற்ற நினைக்கிறோம். இதனால் தான் 2014- தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் டெல்லியில் நடந்த காங்கிரஸ் செயற்குழுவில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்று அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் இந்தியாவில் இருந்து வந்த ஏராளமான தொண்டர்கள் ஆவலுடன் கலந்து கொண்டனர்.
' பிரதமர் பதவி வேட்பாளர் யார்? என்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும். இப்போதைக்கு வீடுகளுக்கு வழங்கப்படும் கியாஸ் சிலிண்டர்கள் ஆண்டுக்கு 12 ஆக உயர்த்தப்படும்' என்ற அறிவிப்பை கேட்ட காங்கிரஸ் தொண்டர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்கள்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்றுப் போவது உறுதியாகி விட்ட நிலையில், எந்த தாயாவது மகனை தியாகம் செய்ய முன் வருவாரா? மகன் ராகுல் காந்தியை காப்பாற்ற காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் இதே முடிவை தான் எடுத்துள்ளார்.
அதேபோல், மிக வசதியான வாழ்க்கை முறையை மேற்கொள்ளும் நாம் ஒரு டீக்கடைக்காரனை எதிர்த்து நமது மகனை பிரதமர் பதவி வேட்பாளராக நிறுத்துவதா? என்ற எண்ணமும், வெட்க உணர்வும் சோனியா காந்திக்கு தோன்றி இருக்கலாம்.
எனவே, தோல்வியில் இருந்து மகனை காப்பாற்றுவதற்காகவே ராகுல் காந்தியை காங்கிரசின் பிரதமர் பதவி வேட்பாளராக சோனியா காந்தி அறிவிக்கவில்லை. என்றார் மோடி.