நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளி யாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. தேர்தல் குறித்து சமீபத்தில் அரசியல் கட்சி தலைவர்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.
அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் இலவசங்கள் வழங்குவதாக அறிவிப்பதற்கு தேர்தல் ஆணையம் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
இந்தநிலையில் இது தொடர்பாக, சில கட்டுப்பாடுகளை விதித்து அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷனின் முதன்மைச் செயலாளர் கே.அஜய் குமார் கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக அரசு இலவசங்கள் வழங்குவது குறித்து சுப்பிரமணியம் பாலாஜி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 5-ந் தேதி வழங்கிய தீர்ப்பில், அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் இலவசங்களை வழங்குவதாக அறிவிப்பது குறித்து சில வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது.
தேர்தல் அறிக்கைகளில் கூறப்படும் வாக்குறுதிகள் ஊழல் நடவடிக்கைகளுக்கு உதவுவதாக கருத முடியாது என்ற போதிலும், இலவசங்கள் வழங்குவதாக அறிவிப்பது, வாக்காளர்களை கவர உதவும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. இது தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்த வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் ஆணிவேரையே அசைப்பது போல் அமைந்து விடும் என்றும் தெரிவித்து இருக்கிறது.