10ஆம் வகுப்பு (SSLC) உடனடித் தேர்வுக்கு இன்று முதல் 26ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மண்டல துணை இயக்குனர் மனோகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உடனடித் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.125 மற்றும் சிறப்பு கட்டணம் ரூ.500 என மொத்தம் 625 ரூபாய்க்கு வங்கிக் காசோலையை, “அரசுத் தேர்வுகள் இயக்குனர், சென்னை-6” என்ற பெயரில் எடுத்து விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தில் ஒட்டப்பட்டுள்ள புகைப்படத்தில் பள்ளி தலைமை ஆசிரியரின் கையொப்பம் பெற வேண்டும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், 26ஆம் தேதிக்குள் துணை இயக்குனர் அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரில் சமர்ப்பித்து ஹால் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.
உடனடித் தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பித்த மாணவர்களுக்கு, ஜூன் 26, 27, 28 ஆகிய தேதிகளில் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி மாவட்டம் வாரியாக ஹால் டிக்கெட் வழங்கப்படும் மையங்களின் விவரம்:
செங்கல்பட்டு அண்ணா நகராட்சி உயர்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு.
காஞ்சிபுரம் எம்.எஸ்.முதலியார் உயர்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்.
பொன்னேரி டி.வி.எஸ்., ரெட்டி மேல்நிலைப் பள்ளி, மீஞ்சூர்.
திருவள்ளூர் லஷ்மி மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.
சென்னை தெற்கு மதரஸா மேல்நிலைப் பள்ளி, அண்ணா சாலை.
மத்திய சென்னை சாவித்திரியம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி, மயிலாப்பூர்.
சென்னை கிழக்கு ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேநிலைப் பள்ளி, சூளைமேடு.
சென்னை வடக்கு பெனிடிக்ட் மேல்நிலைப் பள்ளி, வேப்பேரி.