பத்தாம் வகுப்பில் தமிழ்வழி பயின்று அரசுப் பொதுத் தேர்வுகளில் சாதனை படைத்த 1100 மாணவ, மாணவியருக்கு மடிக்கணினிகளையும், மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பெற்ற 13 மாணவ, மாணவியருக்கு ரூ.2.45 லட்சம் ரொக்கப் பரிசுகளையும் முதலமைச்சர் கருணாநிதி இன்று வழங்கினார்.
தமிழ் வழியில் பயின்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் 1000 மாணவ- மாணவியருக்கு ஊக்கப்பரிசாக மடிக் கணினிகள் (லேப்டாப்) அளிக்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 1000 இடங்களை பெற்றுள்ள 1100 மாணவ, மாணவியருக்கு 3 கோடியே 26 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவில் ஊக்கப்பரிசாக மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 10 மாணவ, மாணவியருக்கு மடிக்கணினிகளை இன்று முதலமைச்சர் கருணாநிதி வழங்கி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அத்துடன் பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர் ப.மா.ஜோஸ் ரிஜன், மாணவி ஜே.ஹெப்சிபா பியூலா, மாணவர் அ.ஜேம்ஸ் மார்ட்டின், மாணவி சி.சுஷ்மா, மாணவி இரா.அபிநயா, மாணவி எஸ்.துளசிராஜ், மாணவர் ஆ.இரா.பாலச்சந்திரன், மாணவி ச.உமா நந்தினி, மாணவர் இரா.விமல் மற்றும் மெட்ரிக்குலேஷன் தேர்வில் மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவி அ.பாலபிரியதர்ஷனி, மாணவர் தினேஷ், மாணவி அ.மிருணாஸ்ரீ, மாணவி கு.சங்கவி ஆகிய 13 மாணவ, மாணவியருக்கும் ரொக்கப் பரிசுத் தொகையாக ரூ.2.45 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும் முதலமைச்சர் வழங்கினார்.
பரிசு பெற்ற மாணவ, மாணவியரின் உயர்கல்விச் செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்கும் என்பதற்கான சான்றிதழ்களையும் இந்த மாணாக்கர்களிடம் முதலமைச்சர் கருணாநிதி வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் எம்.குற்றாலிங்கம், பள்ளிக்கல்வி இயக்குனர் முனைவர் பி.பெருமாள்சாமி, அரசுத் தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி, மெட்ரிக் குலேஷன் பள்ளிகள் இயக்குநர் பி.மணி ஆகியோர் உடனிருந்தனர்.