பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த 10 சாதனையாளர்களுக்கு முதலமைச்சர் கருணாநிதி இன்று பரிசுத் தொகை வழங்கினார். மேலும் எந்தக் கல்லூரியில், எந்தப் பட்டப் படிப்பில் சேர்ந்து படித்தாலும், அதற்குரிய செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்கும் என்பதற்கான சான்றிதழ்களையும் வழங்கி, வாழ்த்துகள் தெரிவித்தார்.
பள்ளிக் கல்வியில் தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படித்து தமிழக அரசின் தேர்வுத் துறை நடத்தும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் குவித்து, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்றுச் சாதனைகள் படைக்கும் மாணவ - மாணவியருக்கு, பி.இ., எம்.பி.பி.எஸ். உட்பட அவர்கள் விரும்பிப் பயிலும் பட்டப் படிப்பிற்கான உயர்கல்விச் செலவு முழுவதையும் தமிழக அரசு ஏற்கும் திட்டம் 1996-ஆம் ஆண்டில் முதலமைச்சர் கருணாநிதியால் அறிமுகம் செய்யப்பட்டு, தொடர்ந்து நடைமுறைப் படுத்தப்படுகிறது.
பள்ளிப் படிப்பில் முழுமையாகக் கவனம் செலுத்தி, கடுமையாக உழைத்து மாநில அளவில் சிறப்பாகத் தேர்ச்சி பெறும் மாணவ- மாணவியர்க்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில் மாநில அளவில் முதல் இடம் பெறுபவர்க்கு வழங்கப்படும் 15 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையை 50 ஆயிரம் ரூபாய் என்று உயர்த்தியும், இரண்டாம் இடம் பெறுபவர்க்கு வழங்கப்படும் 12 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையை 30 ஆயிரம் ரூபாய் என்று உயர்த்தியும், மூன்றாம் இடம் பெறுபவர்க்கு வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையை 20 ஆயிரம் ரூபாய் என்று உயர்த்தியும் இந்த ஆண்டு முதல் வழங்கப்படும் என முதலமைச்சர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, 2009 மார்ச் மாதத்தில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 1200க்கு 1183 மதிப்பெண்கள் ஈட்டி மாநில அளவில் முதல் இடம் பெற்றுள்ள தென்காசி, இலஞ்சி, பாரத் மாண்டிசோரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் பா.ரமேஷ்; ஈரோடு, விஜயமங்கலம், பாரதி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.லிங்கேஸ்வரன்; கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.சி. சிஞ்சு; கரூர், சேரன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவன் ஆ.பிரவின் ஆகியோருக்கு பரிசுத்தொகையாக தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் கருணாநிதி வழங்கினார்.
இரண்டாம் இடம் பெற்றுள்ள கிருஷ்ணகிரி, ஓசூர், ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ஐஸ்வர்யா; தருமபுரி, காந்திநகர் ஸ்ரீ விஜய் வித்யாலயா பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் பி.சுகவனேஷ் ஆகிய இருவருக்கும் பரிசுத்தொகையாக தலா 30 ஆயிரம் ரூபாய்கான காசோலைகளை முதல்வர் வழங்கினார்.
மூன்றாம் இடம் பெற்றுள்ள சேரன்மாதேவி, இருதயகுளம், அமலி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாணவி சை. ஜஸிமா சுலைகா; தூத்துக்குடி, ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளி மாணவி யாழினி சி பிரதீப்; நாமக்கல், காவேட்டிப்பட்டி, குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி மாணவன் எம். வைத்தீஸ்வரன்; ராசிபுரம், எஸ்.ஆர்.வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எம். மீரா ரஷீபா ஆகியோருக்கு தலா 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் கருணாநிதி வழங்கினார்.
மொத்தம் 3 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கிய முதலமைச்சர் கருணாநிதி, பரிசு பெற்ற மாணவ, மாணவியர் எந்தக் கல்லூரியில், எந்தப் பட்டப் படிப்பில் சேர்ந்து படித்தாலும், அதற்குரிய செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்கும் என்பதற்கான சான்றிதழ்களையும் வழங்கி, வாழ்த்துகள் தெரிவித்தார்.
பரிசு பெற்ற மாணவ மாணவியரும், உடன் வந்த பெற்றோரும், ஆசிரியரும் முதலமைச்சரின் இந்த மகத்தான திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வுகளில் மட்டும் மாநில, மாவட்ட அளவில் சாதனைகள் படைக்கும் ஏறத்தாழ 100 மாணவ, மாணவியர் ஆண்டுதோறும் அரசின் செலவிலேயே படித்து முன்னேறும் அருமையான வாய்ப்புகள் கிடைக்கின்றன என்றும், இந்த ஆண்டில் அந்த வாய்ப்புகளைத் தங்களுக்கு வழங்கியமைக்காக முதலமைச்சருக்குத் நன்றி தெரிவிப்பதாக கூறினர்.
இந்த நிகழ்ச்சியின் போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித் துறைச் செயலர் எம்.குற்றாலிங்கம், பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் பி.பெருமாள்சாமி, அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசந்தி ஜீவானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.