பொறியியல் பொதுப் பிரிவுக்கான முதல் கட்ட கலந்தாய்வு நாளை தொடங்கி வரும் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கட்-ஆஃப் மதிப்பெண் 161 வரை பெற்ற சுமார் 60 ஆயிரம் மாணவர்கள் முதற்கட்ட கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
கலந்தாய்வு நடைமுறை குறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைச் செயலர் ரைமன்ட் உத்தரியராஜ் கூறுகையில், இதுவரை 40 ஆயிரம் மாணவர்களுக்கு கலந்தாய்வில் பங்கேற்பதற்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள மாணவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது.
கலந்தாய்வில் பங்கேற்பதற்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் இருந்தும், அழைப்புக் கடிதம் கிடைக்காத மாணவர்கள், தங்களுடைய கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு உரிய நாட்களில் கலந்தாய்வில் பங்கேற்கலாம். ஆனால் கலந்தாய்விற்கு வரும் போது அனைத்து அசல் சான்றிதழ்களுடன் அவர்கள் வர வேண்டும்.
மேலும் கலந்தாய்வு நடைபெறும் இடத்துக்கு அருகில் உள்ள கவுன்ட்டர்களில் வழங்கப்படும் கலந்தாய்வு படிவத்தை அவர் பெற்றுக் கொள்ள வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் ஆயிரம் ரூபாயும், இதர பிரிவினர் ஐந்தாயிரம் ரூபாயும் செலுத்தி கலந்தாய்வு படிவத்தைப் பெறலாம். கலந்தாய்வு கட்டணத்தை டிமாண்ட் டிராஃப்ட் ஆகவோ அல்லது பணமாகவோ செலுத்தலாம்.
கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் குழப்பம் இல்லாமல் சுலபமாக பொறியியல் இடத்தைத் தேர்வு செய்ய பல்கலைக்கழகத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக பெரிய கூடம் (டிஸ்பிளே ஹால்) ஒன்று அமைக்கப்பட்டு, அதில் 4 பெரிய கணினி திரைகள் வைக்கப்பட்டுள்ளன. கட்-ஆஃப் மதிப்பெண் 161-க்கு கீழ் உள்ளவர்கள் 2-வது கட்ட கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர் என்று ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.