பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் கடந்தாண்டைப் போலவே இந்த ஆண்டும் வசூலிக்கப்படும் எனத் தெரிவித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அரசு நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் பட்டியலை இன்று சென்னையில் வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 32,000 ரூபாயும், நிர்வாக ஒதுக்கீட்டிற்கு 62,500 ரூபாய் கட்டணமும் வசூலிக்க வேண்டும். இதற்கு கூடுதலாக வசூலித்தால் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுதொடர்பாக அரசின் சார்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழுவினர், புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சோதனை நடத்தி வருகிறார்கள். தவறு செய்யும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், சிறுபான்மை பொறியியல் கல்லூரிகள், சிறுபான்மை இனத்தவருக்கு ஒதுக்கிய இடங்கள் குறித்த விவரத்தை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க, கலந்தாய்வு முடியும் வரை பெற்றோர் காத்திருக்க வேண்டும் என்று பொன்முடி கூறினார்.