தேர்வுக்குச் செல்லும் மாணவர்களின் கவனத்திற்கு
, திங்கள், 2 மார்ச் 2009 (14:24 IST)
பொதுத் தேர்வுகள் துவங்கிவிட்டன. இனி படிப்பது ஒன்றே முழு நேரக் கடமை என்று இருக்கும் மாணாக்கர்களுக்கு சில குறிப்புகளை சொல்ல நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.தேர்வுக்கு படிக்கும் போது...தூக்கம், சாப்பாடு எல்லாவற்றையும் தவிர்த்து படிப்பது நல்ல முறை அல்ல. சரியான சமயத்தில் உண்டு, சரியாக தூங்கி எழுவது அவசியம்.
விடிய, விடிய கண்விழித்துப் படிப்பது நல்லதல்ல. 6 முதல் 8 மணி நேர தூக்கம் அவசியம். தேர்வு நாட்களிலும் குறைந்த பட்சம் 6 மணி நேரம் தூங்கிவிடுங்கள். இரவு அதிக நேரம் கண்விழித்துப் படிப்பதை விட அதிகாலையில் படிப்பது சிறந்தது.இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தூங்குவது நல்லது.ஒரே பாடத்தை தொடர்ந்து படிக்கக் கூடாது. 45 நிமிடங்களுக்கு ஒரு முறை 5 முதல் 10 நிமிட இடைவெளியுடன் பாடங்களைப் படிக்கலாம்.தொடர்ந்து படிப்பதை விட இடையே ஏதாவது விளையாட்டு அல்லது நண்பர்களுடன் அரட்டை அடிப்பதும் மூளையை களைப்படையாமல் செய்யும். தேர்வு முடியும் வரை மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோரும் தொலைக்காட்சிப் பார்ப்பதை தவிர்க்கவும்.தேர்வின் போது உணவு முறை...தேர்வு துவங்கும் இரண்டு நாட்கள் முன்பிருந்தே வெளியில் சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள். சுகாதாரமாக வீட்டில் சமைக்கப்பட்ட உணவையே சாப்பிடுங்கள்.உடலுக்கு ஒத்துக் கொள்ளாத எந்த உணவையும் ஆசைக்காக உண்ண வேண்டாம்.
படிப்பு படிப்பு என்று உணவை தள்ளிப்போடுவதோ, சாப்பிடாமல் இருப்பதோ அல்லது அல்ல. தேர்வு எழுதச் செல்லும் முன்பு நன்கு சாப்பிட்டு விட்டு செல்ல வேண்டும். வெறும் வயிற்றில் பள்ளிக்குச் செல்லவேக் கூடாது.
காலையில் இட்லி, தோசை, சப்பாத்தி இவற்றில் ஏதேனும் இரண்டு சாப்பிட்டு, பழச்சாறு அல்லது பழங்கள் சில சாப்பிட வேண்டும். மதியம் மற்றும் இரவில் சாதம் அல்லது சப்பாத்தி சாப்பிடலாம்
தேர்வு முடியும் வரை அசைவ உணவைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அசைவம் ஜீரணிக்க கடினமாகவும், நஞ்சாக மாறும் வாய்ப்பு அதிகமாகவும் இருப்பதால் தவிர்ப்பது நலம்.
தேர்வு அறைக்கு செல்லும் முன் சிறுநீர் கழித்துவிட்டு செல்வது நலம். தேர்வு முடிந்து வீட்டிற்கு வந்ததும் அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டும். தேர்வு செல்லும் போது அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டாம்.
தேர்வு அறைக்குச் செல்லும் போது...தேர்வுக்குத் தேவையான பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல் போன்ற பொருள்களை முந்தைய நாளே சரியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.தேர்வுக்கு அரைமணி நேரம் முன்னதாகவே தேர்வு மையத்துக்குச் சென்றுவிட வேண்டும்.
தேர்வு துவங்க சில மணித் துளிகள் முன்பு வரை புத்தகத்தை வைத்து படித்துக் கொண்டிருப்பதை தவிருங்கள். தேர்வு துவங்குவதற்கு 1 மணி நேரம் முன்னதாகவே புத்தகங்களை அதனிடத்தில் வைத்து விட்டு தேர்வு மையத்தில் அமைதியாக உட்காருங்கள். எதைப் பற்றியும் சிந்திக்காமல் மனதை சாந்தமாக வைத்திருங்கள். மாணவர்களுடன் வீண் அரட்டை அடித்து அவர்கள் நீங்கள் படிக்காத கேள்வியைப் பற்றி கூறியதும், அந்த கேள்வி வந்தால் என்ன செய்வது என்றெல்லாம் வீணாக மனதை அலட்டிக் கொள்ள வேண்டாம்.தேர்வு எழுதும்போது...இப்போதெல்லாம் வினாத்தாளைப் படிப்பதற்கு என்று 10 நிமிடங்கள் நேரம் கொடுக்கிறார்கள்.எனவே வினாத்தாளை நன்கு படித்துவிட்டு உங்களுக்குத் தெரிந்த கேள்விகளை முடிவு செய்யுங்கள். இதற்கு பென்சிலால் அந்த கேள்வியை ஒரு டிக் செய்யலாம். அந்த கேளவியை எழுதி முடித்ததும் அந்த டிக் மீது மற்றொரு டிக் (எக்ஸ் போன்று) போட்டு உறுதி செய்யலாம்.நன்கு தெரிந்த வினாக்களுக்கு முதலில் விடையளிக்க வேண்டும். அப்படிச் செய்யும் போது, அந்த வினாவுக்கான எண்ணை சரியாக குறிப்பிட வேண்டும். இதுதான் மிக மிக முக்கியம்.
முதல் மணி அடித்தவுடன் எழுதத் தொடங்கி கடைசி மணி அடிப்பதற்குள் முடித்து விட வேண்டும். திருப்புதலுக்கு நேரம் ஒதுக்க வேண்டும்.
விடைத்தாளில் விடையைத் தவிர, வேறு எந்த விதமான விஷயங்களையும் எழுதக் கூடாது.
சரியான கேள்விகளின் எண்களைப் போட்டு சரியான பதில்களை எழுதியுள்ளோமா என்று ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். அழகாக எழுதி, குறிப்புகள் இட்டு, முக்கியமான வார்த்தைகளுக்கு அடிக்கோடிட்டு பேப்பரின் அடிப்பாகத்தில் கொஞ்சம் இடம்விட்டு கேள்வியை முடியுங்கள்.
ஒரு கேள்விக்கான பதிலை தொடர்ச்சியாக எழுதுங்கள். முதலில் ஒருவார்த்தை பதிலை முடித்துவிடுங்கள்.
பேப்பர்களுக்கு சரியான பக்க எண்களை இடுங்கள். பேப்பரை இரு முனைகளிலும் மடித்து விடுவதை விட ஸ்கேல் வைத்து பென்சிலால் கோடு போடுவது மிக மிக நல்லது.
தேர்வு முடிந்ததும்...
தேர்வு முடிந்தபிறகு, வினாத் தாளை சக மாணவர்களுடன் பேசி ஆராய்வதை விட்டு விட்டு அடுத்த தேர்வுக்குத் தயாராவதே உகந்தது.
தேர்வு மையத்தில் இருந்து வெளியே வரும்போது எழுதி முடித்த பாடத்தைப் பற்றிய எந்த நினைவுகளும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டாம்.
தேர்வு முடிந்து நேராக வீட்டிற்கு வரவும். நண்பர்களுடன் எங்கும் ஊர் சுற்ற வேண்டாம்.
வீட்டிற்கு வந்து சிறிது நேரம் படுத்து தூங்கிய பின் அடுத்த தேர்வுக்கான பாடங்களை படிப்பது மிக சிறந்தது. தூக்கம் வராவிட்டால் குறைந்த பட்சம் அரை மணி நேரம் ஓய்வாக இருப்பதும் நல்லது.
நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.