சென்னை மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகம் நடத்திய எம்.எஸ்சி., (நர்சிங்) படிப்பு கலந்தாய்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
எம்.எஸ்சி., நர்சிங் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் நேற்று நடந்தது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 22 இடங்களுக்கும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 120 இடங்களுக்கும் மாணவர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.
பி.எஸ்சி. நர்சிங் முடித்து அதை பதிவு செய்து ஒரு ஆண்டு முடிந்திருக்க வேண்டும் என்ற விதிமுறைப்படி கலந்தாய்வு நடத்தப்பட்டது. ஆனால் பதிவு செய்வதை கருத்தில் கொள்ளாமல் படித்து முடித்து ஓராண்டு முடிந்தவர்களுக்கும் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.
கலந்தாய்வை நம்பி வெளியூர்களில் இருந்து வந்திருந்த ஏராளமானவர்கள் தங்களையும் கலந்தாய்வில் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த போராட்டம் அரசு உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று நடத்தப்பட்ட கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டது.
எம்.எஸ்சி (நர்சிங்) படிப்புக்கு மீண்டும் ஜூலை 3வது வாரத்துக்குப் பிறகு கலந்தாய்வு நடைபெறும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி தெரிவித்தார்.
இந்திய நர்சிங் கலந்தாய்வு தற்காலிகப் பதிவு இருந்தாலே, எம்.எஸ்சி (நர்சிங்) படிப்பில் மாணவிகளைச் சேர்ப்பதில் தவறில்லை. தகவல் தொடர்பில் ஏற்பட்ட இடைவெளி காரணமாகவே கலந்தாய்வில் பிரச்சனை ஏற்பட்டது.
எனவே மீண்டும் கலந்தாய்வு நடைபெறும் போது பிரச்சனை ஏற்படாது என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மீர் முஸ்தபா உசேன் கூறினார்.