உயர்கல்வி பயில போதிய வசதிகள் இல்லாத பின்தங்கிய மாவட்டங்களில், மத்திய அரசின் நிதியுதவியுடன் வரும் ஆண்டுகளில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
2009-10ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையை தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் இன்று தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது :
மாணவர்களுக்கான வகுப்பறைத் தேவையைக் கருத்தில் கொண்டு, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,142 வகுப்பறைகள் ரூபாய் 65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன. இப்பணிகளுக்கு இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ரூபாய் 27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உயர்கல்வி பயில போதிய வசதிகள் இல்லாத பின்தங்கிய மாவட்டங்களில், மத்திய அரசின் நிதியுதவியுடன் வரும் ஆண்டுகளில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.
ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தடையின்றி உயர்கல்வி பெறும் வகையில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும், கல்விக் கட்டணத்தை ரத்து செய்ததோடு, அரசுக் கல்லூரிகளில் இருந்த சுயநிதிப் பாடப்பிரிவுகள் அனைத்தையும் பொதுப் பாடப்பிரிவுகளாக மாற்றி அமைத்தது.
இத்துடன், மாணவர்களுக்குத் தேவையற்ற சுமையாக இருந்த பொது நுழைவுத் தேர்வும் அகற்றப்பட்டு, கிராமப்புற மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தொழிற்கல்வி பெற வகை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆட்சியில், திருச்சி, கோவை மற்றும் திருநெல்வேலியில் அண்ணா பல்கலைக்கழகங்கள் மூன்று அமைக்கப்பட்டுள்ளதோடு, மாநிலத்தின் பின்தங்கிய பகுதிகளான திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருக்குவளை, இராமநாதபுரம் மற்றும் அரியலூர் ஆகிய இடங்களில் ஆறு புதிய பொறியியல் கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
5 மாவட்டங்களில் புதிய பொறியியல் கல்லூரிகள்
வரும் நிதியாண்டில் அரசுப் பொறியியல் கல்லூரிகள் இல்லாத, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திண்டுக்கல், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் புதிய பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகங்கள் மூலமாகத் தொடங்கப்படும்.
மேலும், தற்போதுள்ள அரசுப் பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, உலக வங்கி நிதியுதவியுடன் தொழிற்கல்வித் தரமேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் செயல்படுத்தப்படும்.
மொத்தமாக, உயர்கல்வித் துறைக்கான ஒதுக்கீடு 2005-2006 ஆம் ஆண்டில் இருந்த ரூபாய் 745 கோடியிலிருந்து, வரும் நிதியாண்டில் ரூபாடீநு 1,463 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.