இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிறுவனங்களில் முனைவர் (Ph.D) பட்டம் பெறாதவர்களும் விரிவுரையாளர்களாகப் பணியாற்றலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்தியாவில் சிறந்து விளங்கும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக ஐ.ஐ.டி. விளங்குகிறது. தற்போது ஐ.ஐ.டி.யில் பணியாற்றும் பேராசிரியர்களில் முனைவர் பட்டம் பெறாதவர்களே இல்லை எனக் கூறும் நிலை உள்ளது. விதிவிலக்காக கடந்த 1970க்கு முன்னர் பேராசிரியராக சேர்ந்தவர்களில் ஒரு சிலர் மட்டுமே முனைவர் பட்டம் பெறாதவர்கள்.
இந்நிலையில், பேராசிரியர் பற்றாக்குறை காரணமாக முனைவர் பட்டம் பெறாதவர்களும் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் விரிவுரையாளர்களாகப் பணியாற்றலாம் என்ற புதிய அறிவிப்பை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஐ.ஐ.டி.யில் விரிவுரையாளர்களுக்கென 10% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஐ.ஐ.டி. இயக்குனர் ஒருவரிடம் கேட்ட போது, முனைவர் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே ஐ.ஐ.டி.யில் பணியாற்ற முடியும் என்ற விதிமுறையை தளர்த்தும் விதமாக மத்திய அரசின் புதிய அறிவிப்பு உள்ளது. முனைவர் பட்டம் பெறாதவர்களை விரிவுரையாளர்களாக பணியமர்த்துவது விருப்பத்திற்கு (optional) உட்பட்டது என்று கூறப்பட்டாலும், இது குழப்பத்தையே ஏற்படுத்தும் என்றார்.