ஆஸ்ட்ரேலியாவில் தங்கி கல்வி பயில்வதற்காக விசா கோரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மாணவர்களுக்கான விசா விதிமுறைகளை கடுமையாக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்களுக்கான விசா விண்ணப்பங்களின் மீதான நடைமுறைகளை ஆஸ்ட்ரேலிய குடியேற்றம் மற்றும் குடியுரிமை இலாகா வலுப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மோசடியாளர்கள் மற்றும் ஆஸ்ட்ரேலியாவில் வாழ்வதற்குத் தேவையான நிதி வசதி இல்லாதவர்கள் நாட்டிற்குள் நுழைவது தடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கல்வி பயில்வதாகக் கூறி ஆஸ்ட்ரேலியாவிற்கு வந்து, அதன் பின்னர் பணியாற்றத் துவங்கும் நபர்களின் எண்ணிக்கையும் குறையும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2008-09இல் மாணவர்களுக்கான விசா திட்டத்தின் கீழ் 3,62,193 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், இதில் தகுதியற்ற 28,000 விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும் ஆஸ்ட்ரேலிய குடியேற்றம் மற்றும் குடியுரிமை அமைச்சர் கிறிஸ் இவான்ஸ் கூறினார்.