எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்பிற்கு நுழைவுத்தேர்வு எழுதாமல் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டுமென்று தொழில்நுட்ப கல்வி ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு பொது நுழைவுத்தேர்வு, கன்சார்டியம் நடத்தும் நுழைவுத்தேர்வு ஆகியவற்றின் மூலம் கடந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இவ்வாறு சேர்க்கப்பட்ட பிறகும், ஏராளமான காலியிடங்கள் இருந்தன. இந்த காலியிடங்களில் எம்.பி.ஏ. படிப்பிற்கு 110 பேரையும், எம்.சி.ஏ. படிப்பிற்கு 170 பேரையும் 22 தனியார் பொறியியல் கல்லூரிகள் சேர்த்தன.
நுழைவுத்தேர்வு எழுதாமல் சேர்க்கப்பட்ட இந்த மாணவர்களுக்கு தமிழக தொழில்நுட்ப கல்வி ஆணையர் ஒப்புதல் வழங்க மறுத்துவிட்டார். இதை எதிர்த்து மாதா பொறியியல் கல்லூரி உள்பட 22 பொறியியல் கல்லூரிகளும், 26 மாணவர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்து நீதிபதி கே.சுகுணா அளித்த தீர்ப்பில், 2004 மற்றும் 2006-ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட அரசு ஆணைப்படி எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு அவசியம். கடந்த கல்வி ஆண்டில் எம்.பி.ஏ. வகுப்பில் 705 காலி இடங்களும், எம்.சி.ஏ. வகுப்பில் 3,655 காலியிடங்களும் விழுந்துள்ளன.
எம்.பி.ஏ., எம்.சி.ஏ. நுழைவுத்தேர்வு எழுதாத மாணவர்களின் சேர்க்கைக்கு ஒப்புதல் வழங்க முடியாது என்று தொழில்நுட்ப கல்வி இயக்குனர் எடுத்த நிலையை ஏற்றுக்கொள்வதற்கு எந்தவித உறுதியான காரணமும் இல்லை.
நுழைவுத்தேர்வு எழுதி பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கூட எம்.பி.ஏ., எம்.சி.ஏ. வகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நுழைவுத்தேர்வு நடத்துவதற்கான நோக்கம் வீணடிக்கப்பட்டுள்ளது. மனுதாரர்களைப் பொறுத்தவரை நடைமுறை ஒழுங்கீனம்தான் நடந்துள்ளது.
எம்.பி.ஏ., எம்.சி.ஏ. வகுப்புகளில் பல இடங்கள் கடந்தாண்டு காலியாக இருந்ததால், நுழைவுத் தேர்வு எழுதாத மாணவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் பிற மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நுழைவுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஒப்புதல் வழங்க மறுப்பதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.
எனவே, எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் இடங்கள் காலியாக இருப்பதற்கு அனுமதிப்பதை விட, ஏற்கனவே இந்தப் படிப்புகளில் சேர்ந்து ஓராண்டு படிப்பையும் முடித்த மாணவர்கள் மேலும் தொடர்ந்து படிக்க அவர்களின் சேர்க்கைக்கு ஒப்புதல் அளித்து, அவர்கள் தேர்வெழுத அனுமதி வழங்க வேண்டும். எனவே மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறேன்,” எனக் கூறினார்.