ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பம் வரும் 15ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 22ஆம் தேதி தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மே 29ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது.
இந்த தேதியில் விண்ணப்பிக்க தவறியவர்கள் தத்கல் முறையின் கீழ் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000 சிறப்பு ஒதுக்கீட்டு கட்டணமாக செலுத்த வேண்டும்.
முதலாமாண்டு, இரண்டாம் ஆண்டு தேர்வுக்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 15, 16, 17 ஆகிய தேதிகளில் வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 17ஆம் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். தத்கல் முறை விண்ணப்பதாரர்களுக்கு சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.