திருவாரூரில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள மத்திய பல்கலைக்கழகத்தை மத்திய அமைச்சர் கபில்சிபல் இன்று துவக்கி வைத்தார். முதல்வர் கருணாநிதி விழாவுக்கு தலைமை தாங்கினார்.
திருவாரூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கூடுதல் கட்டடத்தில் தற்காலிகமாக செயல்பட உள்ள இந்த மத்திய பல்கலைக்கழகம், வண்டாம்பாளையம், திருவாரூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களான தியாகராஜபுரம், பெரும்புகலூர், நீலாத்தூரில் 516 ஏக்கர் நிலப்பரப்பில் அமைகிறது.
முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடந்த விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் பல்கலைக்கழகத்தை தொடங்கி வைத்தார்.
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. தமிழ், எம்.ஏ. ஆங்கிலம் உட்பட 4 பாடப்பிரிவுகள் முதலில் தொடங்கப்பட உள்ளன. மேலும், பிளஸ் 2 படித்த மாணவர்கள் இளநிலை, முதுநிலை ஆய்வு படிப்புகள் வரை தொடர்ச்சியாக பயிலும் வகையில் ஒருங்கிணைந்த கல்வி முறை கொண்டு வரப்படவுள்ளது.
தொழில்படிப்புகள், தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற புதிய பாடப்பிரிவுகளும் படிப்படியாக கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.