70 இடங்கள் - விஜயகாந்தின் நிபந்தனை?
, வெள்ளி, 21 ஜனவரி 2011 (20:25 IST)
அ.இ.அ.தி.மு.க. கூட்டணிக்குள் வரவேண்டுமானால் தனது கட்சிக்கு 70 இடங்களை ஒதுக்கிட வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உறுதியாக கூறிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சேலத்தில் நடந்த தே.மு.தி.க. மாநாட்டில் கூட்டணி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்று அவருடைய கட்சியின் தொண்டர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. மற்ற அரசியல் கட்சிகளிடமும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கூட்டணி வைக்கலாமா, வேண்டாமா என்று கேட்டு, தனது தொண்டர்களை கை தூக்கச் சொன்ன விஜயகாந்த், அவர்களில் பெரும்பாலானோர் கூட்டணிக்கு ஆதரவாக கை தூக்கியதை பார்த்த பிறகு, “கூட்டணியை நான் முடிவு செய்வேன், உங்களை யாரிடமும் அடகு வைத்து விட மாட்டேன்” என்று கூறி சப்பென்று முடித்தார். அதன் பிறகு விழுப்புரத்தில் நடந்த கூட்டத்திலும் கூட்டணி பற்றிய முடிவை அறிவிக்கவில்லை. கூட்டணித் தொடர்பான (இரகசிய) பேச்சுவார்த்தைகள் இன்னமும் தொடர்ந்து வருகிறது என்றும், விஜயகாந்த் கேட்கும் அளவிற்கு தொகுதிகளை ஒதுக்கித் தருவதற்கு அ.இ.அ.தி.மு.க. தலைமை தயாராக இல்லையென்பதால், கூட்டணி அமைவது இன்னமும் உறுதியாகவில்லை என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில், அ.இ.அ.தி.மு.க. தலைமைக்கு சமீபகாலமாக அ.இ.அ.தி.மு.க. தலைமைக்கு மழைபோல் சோவென்று ஆலோசனைகளை கொட்டி வரும் ‘பழைய’ ஆளே ஈடுபட்டு வருகிறார் என்றும், அவரிடம் 70 இடங்களுக்கு குறைய மாட்டோம் என்று விஜயகாந்த் திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.