நிலம் வாங்குவது இனி கனவுதான்!
, புதன், 28 மார்ச் 2012 (16:18 IST)
தமிழ்நாட்டில் நிலத்தின் வழிகாட்டி மதிப்பை 170 சதவீதமாக முதல்வர் ஜெயலலிதா உயர்த்தியுள்ள தன் மூலம் நடுத்தர மக்கள் வீடுகளோ, மனைகளோ வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் அரசுக்கு 600 கோடி ரூபாய் வருவாய் கிடைக்க உள்ளது.தங்கத்தை போல் தற்போது மனைகளின் மதிப்பும் நாளுக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. முன்பெல்லாம் தங்கத்தில் முதலீடு செய்து வந்த மக்கள் தற்போது நிலத்திலும் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனென்றால் தங்கம் போன்று ஆனது நிலம்.ஒரு காலத்தில் ஆயிரம், லட்சக்கணக்கில் விலைபோன நிலங்கள் எல்லாம் தற்போது கோடிக்கணக்கில் விலை போகிறது. இதனால் ஆதாயம் பெறுவது பண முதலைகள்தான். தமிழகத்தில் தற்போது கொடிகட்டி பறப்பது ரியல் எஸ்டேட் தொழில்தான்.
முன்பெல்லாம் நகரங்களில் தான் மனைகளின் விலைகள் அதிகரித்தது. தற்போது கிராமங்களிலும் மனைகள் வாங்கி முடியாத அளவுக்கு சென்று விட்டது. அதுவும் நடுத்தர மக்கள் நிலம் வாங்குவது என்பது கனவுதான். அவர்களின் கனவுகளை மேலும் கனவு காண வைத்துள்ள தமிழக அரசு.ஒருவரிடம் இருந்த நிலத்தை மற்றொருவருக்கு விற்கப்படும்போது அதனை பதிவு செய்ய அரசுக்கு முத்திரை தாள் கட்டணம் செலுத்த வேண்டும். விவசாய நிலம், வீட்டுமனை நிலங்களுக்கு அரசு வழிகாட்டி மதிப்பு வெளியிட்டு வருகிறது.நிலங்களின் விலை உயரும் போது அதற்கு ஏற்ப வழி காட்டி மதிப்பை உயர்த்தி வருகிறது. முத்திரை தாள் கட்டண செலவை குறைப்பதற்காக நிலம் விற்போர்-வாங்குவோர் நிலத்தின் மதிப்பை குறைத்து போட்டு அதற்கு ஏற்றபடி முத்திரை தாள் கட்டணம் செலுத்துகிறார்கள். இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. வெளிச்சந்தையில் நிலத்தின் மதிப்பு தாறுமாறாக இருந்தபோதிலும் வழிகாட்டி மதிப்பு என்பது பல ஆண்டுகளாக மிக மிக குறைவாக இருந்து வந்ததே இதற்கு காரணம். இதை தடுக்கவும், அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும் வகையிலும் புதிய நில வழிகாட்டி மதிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், விவசாய நிலங்களின் வழிகாட்டி மதிப்பு 270 சதவீதமும், வீட்டுமனை நில வழி காட்டி மதிப்பு 170 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழக அரசின் வணிக வரித்துறைக்கு அடுத்த படியாக அதிக வருவாய் ஈட்டித்தரும் துறையாக பதிவுத்துறை இருக்கிறது. இதில் வருவாய் இழப்பு ஏற்படுவதை தடுக்க, வழி காட்டி மதிப்பை அதிகரிக்கும் முயற்சிகளை தமிழக அரசு கடந்த ஆண்டு மேற்கொண்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் பிரதான குழுவும், துணை குழுவும் அமைக்கப்பட்டு நில வழிகாட்டி மதிப்பு திருத்தி அமைக்கப்பட்டன. புதிய நில வழிகாட்டி மதிப்பு இணைய தளத்திலும் (www.tnreginet.net) கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த உயர்வு வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.வழிகாட்டி மதிப்பில் இருந்து 6 சதவீதம் முத்திரை தாள் கட்டணமாகவும், ஒரு சதவீதம் கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. இந்த வருவாய்தான் பதிவுத்துறைக்கு செல்கிறது. சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் உள்ள ஒவ்வொரு தெருவுக்கும் நில வழிகாட்டி மதிப்பு பற்றி அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிரதான பகுதியில் உள்ள ஒரு தெருவில் 10 சதுர அடி நிலம் ரூ.12 ஆயிரம் எனவும், 1000 சதுர அடி நிலம் ரூ.12 லட்சம் என்றும் வழிகாட்டி மதிப்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையில் 6 சதவீதம் முத்திரை தாள் கட்டணமாகவும், ஒரு சதவீதம் கட்டண மாகவும் செலுத்தவேண்டும். நில வழிகாட்டி மதிப்பு குறித்த விவரங்கள் ஓரிரு நாட்கள் மட்டுமே இணைய தளத்தில் இருக்கும்.புதிய வழிகாட்டி மதிப்பு அமலுக்கு வருவதன் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.600 கோடி அளவுக்கு வருவாய் கிடைக்க உள்ளது. நிலம் வாங்கும் கனவில் இருந்த நடுத்தர மக்களின் தலையில் முதல்வர் ஜெயலலிதா பெரிய இடியை போட்டுவிட்டார்.