தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த மாதம் 25 ஆம் தேதி தொடங்கியது. இதனால் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. காவிரி முகத்துவார மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் லட்சக்கணக்கான ஏக்கர் விலை நிலங்கள் நீரில் முழ்கியுள்ளன. கடந்த 10 நாட்களாக பெய்த கன மழையால் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 12 பேர் மழையால் இறந்துவிட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகளும் பலியாகி விட்டன. வீடுகளை இழந்த 20 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் சுமார் 1,000 ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வீராணம் ஏரியில் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவதால் அங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ள நீரில் மிதக்கின்றன.
நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பேட்டையில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கையில் விழுப்புரம் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 25 பேர் பலியாகியுள்ளனர். சென்னை- 4, திருவள்ளூர்- 7, காஞ்சிபுரம்- 5, வேலூர் - 6, கடலூர்- 10, திருவண்ணாமலை -2, சேலம் -1, தர்மபுரி-3, கிருஷ்ணகிரி- 2, ஈரோடு - 10, கோவை- 3, அரியலூர் - 9, தஞ்சை- 5, மதுரை-7, திண்டுக்கல் - 2, தேனி- 5, ராமநாதபுரம்- 6, நெல்லை- 3, தூத்துக்குடி- 2, கன்னியாகுமரியில்- 7.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்டோருக்கு 1 கோடியே 31 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையர் ந.சுந்தரதேவன் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:
தமிழக அரசின் கணக்குபடி பார்த்தால் நேற்று வரை தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 123. இவர்களில் ஆண்கள் 58, பெண்கள் 35, குழந்தைகள் 30. உயிரிழந்தோரின் குடும்பத்தினர்களுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சமும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ஆக இரண்டு லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக வழங்கப்பட்டு வருகிறது.
இத்தொடர் மழையின் காரணமாக இறந்துள்ள 612 கால்நடைகளில் ஏறத்தாழ 390 கால்நடைகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், சேதமடைந்துள்ள 17,417 குடிசைகள், வீடுகளில், பகுதியாக சேதமடைந்தவை 14,447, முழுமையாக சேதமடைந்தவை 3,000. பகுதியாக சேதமடைந்தவைகளுக்கு தலா 2,500 ரூபாயும், முழுமையாக சேதமடைந்தவைகளுக்கு தலா ரூபாய் 5 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வருகிறது.
மழையின் காரணமாக உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவித்தொகை, கால்நடைகள் இழப்பீட்டுத் தொகை, சேதமடைந்த வீடுகள், குடிசைகளுக்கு மொத்த உதவித் தொகையாக ஒரு கோடியே 31 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக சென்றடைந்ததா என்பது என்றால் சந்தேகம்தான்.
தமிழகத்தில் இன்றும் மழை உயிர் பலி 154 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் 31 பேரை அரசு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. மின்சாரம் தாக்கி அவர்கள் பலியானதுதான் காரணமாம். மின்சாரம் தாக்கி பலியானால் அவர்களுக்கு அரசு நிவாரணம் கிடையாது என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இது நியாயமற்றதாகும். புயல் காற்றால் மின் கம்பிகள் அறுந்துவிழுவது வாடிக்கையே. இப்படி அறுந்து கிடக்கும் இடத்தில் மக்கள் நடந்து செல்லும் போது எதிர்பாராத விதமாக உயிரிழப்பு ஏற்படுகிறது. இதன் மூலம் இறப்பு ஏற்படும்போது ஏன் நிவாரணம் கிடையாது என்பதுதான் தற்போதைய கேள்வி.
காற்றில் மின் கம்பிகள் அறுந்து விழுவதற்கு அரசு அல்லது மின்வாரியம் பொறுப்பில்லையா? இது ஏதோ மக்களே தேடிக் கொண்ட வினை என்பதுபோல் தமிழக அரசு பாராமுகம் காட்டுவது என்ன நியாயம்? மின்னல் தாக்கி உயிரிழந்தவர்கள் என்றால் என்ன பொருள், மின்னல் என்பது மிக அதிக மின்னழுத்தம் கொண்ட மின்சாரம் அல்லவா? அது தாக்கி இறந்தால் இழப்பீடு, மின்சார கம்பிகள் தாக்கி இறந்தால் இயற்கை மரணமா? அரசு தனது நிலையை விளக்க வேண்டும்.
இந்த நாட்டின் அரசு நிர்வாகம் உருப்படியாக செயல்பட்டு சாதாரண மக்களின் வாழ்வை மேம்படுத்தியிருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் இப்படி மக்கள் மழையாலும், மின்னலாலும், வெள்ளத்தாலும் இறப்பார்களா?