மியான்மாரில் பவுத்த பயங்கரவாதம் - ஒரு அலசல்
, செவ்வாய், 2 ஜூலை 2013 (17:31 IST)
ஜூலை 1ஆம் தேதி டைம் இதழில் மியான்மாரை முன்வைத்து "பவுத்த பயங்கரவாதத்தின் முகம்' என்ற தலைப்பில் கவர் ஸ்டோரி வெளிவந்தது.மியான்மார் பவுத்த பிட்சு ஏ.விராது என்பவர் முஸ்லிம்களுக்கு எதிராக 969 பவுத்த தேசியவாத இயக்கங்களை வழி நடத்தி வருகிறார். மியான்மரில் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் என்பது குறிப்பிடத்தக்கது.இஸ்லாமியர்களையும் அவர்களது வர்த்தகங்களையும் ஒழித்துக் கட்டவேண்டும் என்று அவர் வெளிப்படையாக பேசியும் பிரச்சாரம் செய்தும் வருகிறார். 'அமைதியாக இருக்க இது நேரமல்ல' என்று பவுத்தர்களை இஸ்லாத்துக்கு எதிராக துவேஷத்தை கிளப்பி வருகிறார் பிட்சு விராது.தன்னை பர்மாவின் பின் லேடன் என்றே அவர் அழைக்க விருப்பப்படுகிறார். 2001ஆம் ஆண்டு 969 இயக்கத்தை அவர் அமைக்கிறார். இவரது கொள்கைகள் நேரடியாக ஹிட்லரின் நாஜியத்தை ஒத்ததாக உள்ளது. அதற்கு குறைந்தது அல்ல என்றே கூறலாம்.முஸ்லிம் என்ற எந்த ஒன்றும் தன் நாட்டில் இருக்கக்கூடாது என்ற அளவில் அவரது துவேஷம் செயல்பட்டு வருகிறது. இவருக்கு மியான்மார் அரசு, ராணுவம், பொதுமக்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இவரது துவேஷப் பேச்சு தாலிபான்கள் பாமியன் சிலைகளை உடைத்து எறிந்ததற்குப் பிறகு பிரபலமடையத் தொடங்கின. இதன் பிறகே மியான்மாரில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை பெருகியது. பவுத்த பிட்சுக்களே நேரடியாக வன்முறையில் இறங்கினர்.
இஸ்லாமிய மக்களின் புனித இடமான மசூதிகள் சூரையாடப்பட்டன. முஸ்லிம்கள் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. 2003 வரை இந்த அட்டூழியங்கள் நடந்து வந்தது. ராணுவம் அவரை பிறகு கைது செய்து 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
இதே நிறவெறியனான பவுத்த பிட்சுவை கடந்த ஆண்டு மியான்மார் அரசு விடுதலை செய்தது. இப்போது இவர் தற்போது பவுத்த மடம் ஒன்றின் தலைமைப் பீடத்தில் அமர்ந்துள்ளார்.கடந்த ஆண்டு மே-அக்டோபரில் அராகன் மாநிலத்தில் பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டதில் பவுத்த பிட்சுக்களின் நேரடி தாக்கம் அதிகம். பிட்சுக்களே நேரடியாக வன்முறையில் இறங்கியதைப் பார்க்க முடிந்தது என்று டைம் இதழின் இந்தக் கட்டுரை அம்பலப்படுத்தியுள்ளது. ராகின் என்ற மாநிலத்தில் மட்டும் பவுத்த வன்முறைக்கு ஏகப்பட்ட முஸ்லிம்கள் மரணமடைந்தனர். சுமார் 1,40,000 முஸ்லிம்கள் வீடிழந்துள்ளனர்.