பிரதமருடன் மோதும் பிரணாப்!
2
ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரம் தொடர்பாக பொது கணக்குக்குழு முன் ஆஜராக தயாராக இருப்பதாக கூறிய பிரதமர் மன்மோகன் சிங்கை மட்டம் தட்டும் வகையில்,அதற்கெல்லாம் அவசியமில்லை என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளது காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களிடையே நிலவும் மோதல்களை அம்பலமாக்கியுள்ளது.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி எதிர்கட்சிகள் செய்த அமளியால், நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடர் முற்றிலும் முடங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அடுத்து கூடவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரையாவது உருப்படியாக நடத்த வேண்டும் என்று பிரதமர் விரும்பினார். இந்நிலையில்தான், கடந்த டிசம்பர் 20 ஆம் தேதியன்று நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய பிரதமர், 2ஜி விவகாரத்தில் எந்த கணக்குகளும் மறைக்கப்படவில்லை என்றும்,இது தொடர்பாக பொதுக் கணக்குக்குழு முன் விசாரணைக்கு ஆஜராக தயார் என்றும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஏனெனில் இதுவரை பிரதமர் பதவியில் இருந்த ஒருவர் பொதுக் கணக்கு குழு முன்னர் ஆஜரானதில்லை. அவ்வாறு பிரதமரை ஆஜராகுமாறு கூறும் அதிகாரமும் அதற்கு கிடையாது. அதையும் மீறி பிரதமரே முன்வந்து இக்குழு முன் ஆஜரானால் வரலாற்றில் அதுவே முதல் முறையாக இருக்கும் என்றும் அப்போது கூறப்பட்டது.
இந்நிலையில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர் ஆதாயம் ஏதும் அடையவில்லை என்றபோதிலும், முறைகேடுகள் நடப்பது கண்முன் தெரிந்தும், அதனை தடுத்து நிறுத்தாமல் கையாலாகாதவராக அவர் இருந்துவிட்டார் என்ற குற்றச்சாற்றின் வீரியத்தை குறைக்கும் விதமாகவே, மன்மோகன் அந்த அறிவிப்பை வெளியிட்டார். அதாவது தம் மீது களங்கம் இல்லை என்று நிரூபிக்க பிரதமர் துடிப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கூறினர்.