''புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வெற்றி அரசின் ஓராண்டு சாதனைக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த வெற்றி'' என்று முதல்வர் ஜெயலலிதா மார்தட்டியுள்ளார். உண்மையை சொல்ல வேண்டுமானால், பணம், இலவசங்கள் தான் காரணம்.
அ.தி.மு.க. ஆட்சியின் ஓராண்டு சாதனைகளை, வளர்ச்சித்திட்டங்களை மனதில் நிலை நிறுத்தி, புதுக்கோட்டை தொகுதி வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக முதல்வர் கூறியிருக்கிறார். ஆனால் இந்த 13 மாத ஆட்சியில் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா என்பது கிடையாது. அதற்கு பதிலாக பால், பேருந்து, மின்சாரம் ஆகியவற்றின் கட்டணத்தை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியதுதான் முதல்வர் ஜெயலலிதாவின் ஓராண்டு சாதனை.
கட்டணத்தை உயர்த்தாவிட்டால் ஆவின் பால், போக்குவரத்து கழகத்தை இழுத்து மூட வேண்டியதான் என்று கூறிய ஜெயலலிதா, இந்த விலை உயர்வை பொதுமக்கள் கசப்பு மருந்து போல ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார். இந்த கசப்பு மருந்து இன்று வரை தொடரத்தான் செய்கிறது.
2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது, புதுக்கோட்டை தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகளில், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் வேட்பாளர் 47 சதவீத வாக்குகள் பெற்றதையும், தற்போது, அ.தி.மு.க. தனித்தே போட்டியிட்டு 71 சதவீத வாக்குகள் பெற்றிருப்பதையும் ஒப்பிட்டுப்பார்க்கும்போது, அ.தி.மு.க. வாக்கு வங்கி 24 சதவீதம் அதிகரித்து இருக்கிறது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் 32 அமைச்சர்கள் களம் இறக்கப்பட்டனர். அவர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களை பணத்தாலும், இலவச பொருட்களாலும் தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டனர். மக்களை பொறுத்தவரை ஆட்சியாளர்கள் என்னதான் தவறு செய்தாலும், இடைத்தேர்தல் வந்தால் படுகுஷியாகி விடுகின்றனர். காரணம், ஆளும் கட்சியால் தங்களுக்கு பணம், பொருள் கிடைக்குதான் என்பதுதான். பணம் வாங்கி விட்டோமே என்ற எண்ணத்தில்தான் மக்கள் வாக்களிகிறார்களே தவிர, அவர்கள் இஷ்டப்பட்டு வாக்களிக்கவில்லை என்பதுதான் உண்மை.
பெரும்பாலான வாக்காளர்கள் மிரட்டப்படுகிறார்கள். வேட்பாளர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். இதுதான் இடைத்தேர்தலில் ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் நிலை. இடைத்தேர்தலில் வேண்டுமானால் வாக்காளர்களை ஆளும் கட்சியினர் விலை கொடுத்து வாங்கி விடலாம். ஆனால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சியால் வாக்காளர்களை விலை கொடுத்து வாங்க முடியாது. ஏனென்றால், 39 தொகுதிகளுக்கும் கோடிக்கணக்கில் பணத்தை இரைப்பது கடினம்.
புதுக்கோட்டை வெற்றி நாடாளுமன்ற தேர்தலுக்கு அடித்தளம் என்று அதிமுகவினர் கூறிக் கொள்ளலாம். ஆனால், பால், பேருந்து, மின்சாரம் ஆகியவற்றின் கட்டணத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்து வரும் மக்கள், நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சிக்கு பாடம் புகட்டுவது உறுதி.
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடாத தி.மு.க.வின் வாக்குகள் அ.தி.மு.க.விற்கு எதிராக விழுந்திருந்த சூழ்நிலையிலும், அ.தி.மு.க. 71 சதவீத வாக்குகளைப் பெற்றிருப்பது, மக்கள் அ.தி.மு.க.வின் பக்கம்தான் என்பதை எடுத்துக்காட்டுகிறது என்று ஜெயலலிதா கூறுவதை அ.தி.மு.க.வினர் வேண்டுமானால் நம்பலாம், பொதுமக்கள் ஏமாற மாட்டார்கள்.
உயர்த்தப்பட்ட பால், பேருந்து, மின்சாரம் ஆகியவற்றின் கட்டணத்தை திரும்ப பெற்றால் மட்டுமே நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒன்றிரண்டு இடத்தில் வெற்றி கிடைக்கும் இல்லையென்றால் 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத நிலைதான் அ.தி.மு.க.வுக்கும் என்பதை முதல்வர் ஜெயலலிதா உணர வேண்டும்.