''நான் முதலமைச்சராக பதவியேற்பதற்கு முந்தைய தினமே சங்கிலி பறிப்பு நிகழ்வுகள் வெகுவாக குறைந்துவிட்டது, சங்கிலியை பறிக்கும் ஆட்கள் எல்லாம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக தகவல் வந்துள்ளது'' என்று கடந்த மாதம் 16ஆம் தேதி ஜெயலலிதா கூறியிருந்தார்.
ஆனால், சங்கிலிக் கொள்ளையர்கள் தமிழகத்தில்தான் இருக்கிறார்கள், ஆந்திராவிற்கு செல்லவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், கடந்த மாதம் 24ஆம் தேதி சென்னை துறைமுகம் தொகுதியின் அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா மனைவி கலைவாணியின் கழுத்தில் கிடந்த 10 சரவன் தங்க நகைகளை கொள்ளையன் பறித்துச் சென்று விட்டான்.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் கொள்ளை நிகழ்வுகள் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. நேற்றுகூட சென்னை, சேலம், திருச்சி ஆகிய நகரங்களில் நகைக் கொள்ளைகள் நடந்துள்ளது.
சேலம் அழகாபுரத்தை சேர்ந்த ஜவுளி வியாபாரி ரகுராமன் என்பவர் வீட்டில் 150 பவுன் நகை, 3 கிலோ வெள்ளி, ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளைபோன தங்க நகைகளின் மதிப்பு ரூ.22 லட்சம். 3 கிலோ வெள்ளி நகையின் மதிப்பு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம். ரொக்கப்பணம் ரூ.1 லட்சம். மொத்தம் ரூ.25 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
அதைவிட கொடுமை என்னவென்றால் காவல்துறையினர் வீடுகளிலேயே கொள்ளையர்கள் தங்கள் கைவரிசை காட்டியுள்ளனர். திருச்சியில் காவலர் குடியிருப்பில் திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்று வரும் ஆரோக்கியராஜ் வீட்டில் 23 பவுன் நகைகள், ரூ.33 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையர்கள் அதோடு விட்டுவிடாமல் காவல்துறை உதவி ஆய்வாளர் வீடு அருகே வசித்து வந்த சி.பி.சி.ஐ.டி.யில் சிறப்பு புலனாய்வு பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றி வரும் ஜெயசேகர் என்பவரின் வீட்டிலும் 10 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
சென்னை கொண்டித்தோப்பில் வசித்து வரும் பாரதி என்பவரின் வீட்டில் 10 சவரன் நகைகளும், திருவான்மியூரில் வசித்து வரும் ராமேஸ்வரன் என்பவரின் வீட்டில் 15 சவரன் நகைகளும், திருவொற்றியூரை சேர்ந்த பாபு என்பவரிடம் கத்தி முனையில் மிரட்டி 3 பவுன் செயின், செல்போன், 500 ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர்.
இந்த கொள்ளை நிகழ்வுகள் அனைத்தும் நேற்று நடந்தவை. சங்கிலி திருடர்கள் ஆந்திராவிற்கு ஓடிவிட்டார்கள் என்று கூறிய முதலமைச்சர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு இது பற்றிய தகவல் இன்னமும் செல்லாமலா இருக்கும்?
இந்நிலையில்,.கொள்ளையர்களுடன் கூட்டுச் சேர்ந்து காவல்துறையை சேர்ந்த சிலரும் ஈடுபட்டு வருவதாக ஒரு குற்றச்சாற்று அண்மை காலமாக இருந்து வருகிறது. அதனை உறுதி செய்யும் வகையில் தமிழகத்தில் பல நிகழ்வுகள் நடந்துள்ளன.
போதாதற்கு காவலர்கள் வீட்டிலேயே கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இப்படிப்பட்ட கொள்ளையர்கள் ஆந்திராவில் இருந்து வந்தவர்களா அல்லது தமிழகத்திலேயே இருப்பவர்களா? என்பதுதான் தற்போதை கேள்வி.
சட்டம் - ஒழுங்கு முதலில் நிலைநாட்டப்படும் என்று கூறிய முதலமைச்சர் ஜெயலலிதா, கொள்ளையர்களின் சாம்ராஜ்ஜியத்துக்கு முதலில் முடிவு கட்ட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.