வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றும் பெரும் நிறுவனங்களுக்கு கடன் கொடுத்தாலும் கொடுப்போமே தவிர, மாணவர்களுக்கு கல்விக் கடன் கொடுக்க மாட்டோம் என்று பிடிவாதமாக நடந்து கொள்கின்றன வங்கிகள். பொதுத் துறை வங்கிகளின் இந்தப் பொறுப்பற்ற செயலைத்தான் நீதிமன்றம் கடிந்துரைத்துள்ளது.
தொழில் கடனை செலுத்த பெற்றோர் தவறியதை காரணம் காட்டி மகளுக்கு கல்விக்கடன் வழங்குவதற்கு வங்கிகள் மறுக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணி அடித்தார்போல் ஒரு தீர்ப்பை அண்மையில் வழங்கியது.
சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் மாணவி சஹானா. இவர், காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் அருகே உள்ள ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் பி.டெக். படித்து வருகிறார். ஓரளவு நடுத்தரமான குடும்பம் என்றாலும் தற்போது கல்வி வணிகமயம் ஆகிவிட்ட நிலையில் கல்விக் கடன் கேட்டு முகப்பேரில் உள்ள ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் என்ற வங்கியில் விண்ணப்பித்துள்ளார். இந்த விண்ணப்பத்தில், அவரது பெற்றோரும் இணை விண்ணப்பத்தாரராக சேர்க்கப்பட்டிருந்தனர்.
இணை விண்ணப்பத்தாரர்களாக பெற்றோர் சேர்க்கப்பட்டதால் சஹானாவுக்கு ஆண்டுக்கு ரூ.55 ஆயிரம் வீதம், 4 ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் கல்விக் கடன் வழங்க ஓரியண்டல் வங்கி அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து சஹானாவுக்கான 2 ஆண்டுகள் கல்விக்கான கட்டணத்தை கல்லூரிக்கு வங்கி நிர்வாகம் கொடுத்துவிட்டது.
இரண்டு ஆண்டுகள் படிப்பை முடித்த சஹானாவுக்கு மூன்றாம் ஆண்டில் ஓரியண்டல் வங்கி அதிர்ச்சியை கொடுத்தது. ஏனென்றால், சஹானாவின் பெற்றோரும் அதே வங்கியில் தொழில் கடன் வாங்கி உள்ளனர். ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், வாங்கியிருந்த கடனுக்கான தவணைத் தொகையை சஹானா பெற்றோரால் செலுத்த முடியவில்லை.
கடன் தொகையை பெற்றோர் செலுத்தாமல் போனதால், சஹானாவுக்கு வழங்க வேண்டிய 3, 4ம் ஆண்டு கல்வி கடனை அனுமதிக்க முடியாது என்று வங்கி நிர்வாகம் மறுத்துவிட்டது.
கல்விக் கடன் வழங்க மறுத்த வங்கியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் சஹானா. வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி அரிபரந்தாமன், சம்பந்தப்பட்ட வங்கிக்கு சாட்டை அடி கொடுத்தார்.
''கல்வி கடன் வழங்குவதில், ரூ.4 லட்சம் வரை உத்தரவாதம் வழங்க தேவையில்லை. ஆனால் மனுதாரர் சஹானாவுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் ரூ.2.20 லட்சத்துக்கு அவரது பெற்றோரையும் இணை மனுதாரராக வங்கி நிர்வாகம் சேர்த்துள்ளனர். பெற்றோர் வாங்கிய தொழில் கடன் தொகை செலுத்தப்படவில்லை என்பதற்காக மகளுக்கான கல்விக் கடனை மறுப்பதாக வங்கி நிர்வாகம் கூறியுள்ளது. இதில் எந்த நியாயமும் இல்லை. அவர் அந்தப் படிப்பை முழுவதுமாக முடித்தால்தான், ஒரு வேலைக்கு வந்து, கடன் ஒப்பந்தப்படி 6 மாதங்களுக்குள் கடனை அடைக்க முடியும். எனவே சஹானாவுக்கு கல்விக் கடன் வழங்க மறுப்பது சரியல்ல. இது கல்விக் கடன் திட்டத்துக்கு எதிரான நடவடிக்கையாகும். எனவே சஹானாவின் பாக்கி கல்விக் கடனை உடனடியாக வங்கி செலுத்த வேண்டும்'' என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
ஏழை, பணக்காரன் என்று வித்தியாசம் பார்த்து கடன் கொடுக்கும் வங்கிகளும் இருக்கின்றன. நல்ல மதிப்பெண் இருந்தால்தான் கடன் தருவோம் என்று சொல்கிற வங்கிகளும் நமது நாட்டில் தான் இருக்கின்றன.
கடந்த ஆண்டு இப்படி நிகழ்வு ஒன்று தமிழகத்தில் நடந்தேறியது. பிளஸ் 2 முடித்த மாணவர் ஒருவர் பொறியியல் படிப்பில் இடம் கிடைத்தும் அவரால் கல்விக் கட்டணம் செலுத்த முடியவில்லை. வங்கியை நாட்டிச் சென்ற மாணவருக்கு குறைந்த மதிப்பெண் பெற்றிருப்பதால் கடன் வழங்க முடியாது என்று தட்டிக் கழித்துவிட்டது. பாதிக்கப்பட்ட மாணவர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி வங்கியில் கல்விக் கடன் பெற்றார். தனது படிப்பையும் முழுமையாக முடித்தார்.
கடந்த ஜூன் 30ஆம் தேதி கணக்குப்படி, 1,89,596 மாணவர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் கடந்த காலாண்டில் மட்டும் 38,103 மாணவர்களுக்கு ரூ.210.5 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் இந்தியன் வங்கியின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான டி.எம்.பாசின் பெருமைப்பட்டு கொள்கிறார். ஆனால் கல்விக் கடன் மறுக்கும் வங்கிகளை பற்றி கேட்டால் வாய் திறக்க மறுக்கிறார்.
நல்ல மதிப்பெண்கள் எடுத்து மேல் படிப்பை தொடர முடியவில்லையே என்று ஏங்கும் மாணவர்கள்தான் நமது நாட்டில் அதிகமாக உள்ளனர். வறுமையிலும் கல்வியில் முதல் மாணவ- மாணவிகளாக திகழ்பவர்கள் தமிழகத்தில் அதிகம் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட மாணவர்களை வங்கிகள் கண்டெடுத்து அவர்களை ஊக்கப்படுத்தும் காலம் என்று வருமோ?