கலைஞர் வீட்டுவசதி திட்டம், கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுவிட்டதாக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் சுர்ஜித் பர்னாலா ஆற்றிய உரையின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 'உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டம்' மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவையும் நல்மதிப்பை பெற்றது. நல்லவேளையாக அது கலைஞர் அவசர சேவை என்று வைக்காமல் விட்டதால் அந்த திட்டம் தப்பியது.
கடந்த ஆட்சியில் 2 லட்சத்து 62 ஆயிரம் ஏழைகள் உயர் சிகிச்சையை இலவசமாகப் பெற்றுள்ள காப்பீட்டுத்திட்டத்தை தற்போது ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க அரசு நிறுத்தி விட்டது.
இந்த திட்டத்தை நிறுத்தியதற்காக காரணத்தை தமிழக அரசு விளக்கியுள்ளது. ''தற்போதுள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மக்களின் தேவைகளை நிறைவு செய்யத்தக்க வகையில் முழுமையாக இல்லை என்பதால், இத்திட்டம் கைவிடப்படும். அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவை வழங்கும் நோக்கத்தை எட்டக்கூடிய வகையில் ஒரு புதிய பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை இந்த அரசு அறிமுகப்படுத்தி அனைவரும் மருத்துவ வசதி பெறுவதை உறுதி செய்யும்'' என்பதுதான் அந்த விளக்கம்.
இந்த மருத்துவ திட்டத்திற்காக பல லட்சம் குடும்பங்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. தற்போது அந்த அட்டைகள் அனைத்தும் குப்பைக்கு போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு பதிலாக அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவை வழங்கும் வகையில் ஒரு புதிய பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தப்போவதாக கூறியுள்ள தமிழக அரசு, ஏற்கனவே இருந்த திட்டத்தை நீக்குவதற்குக் கூறிய காரணம் ஏற்றுக்கொள்வதாக இல்லை.
இன்றைய காலக் கட்டத்தில் என்னென்ன நோய்கள் வருகின்றன என்று தெரியவில்லை. பணம் இருப்பவர்கள் தனியார் மருத்துவமனைக்கு சென்று தங்கள் நோயை குணப்படுத்திக் கொள்வர். ஆனால் ஏழைகளால் பல லட்சம் ரூபாய் செலவளிக்க முடியுமா? என்பதையும் அரசு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
சமச்சீர் கல்வியை தமிழக அரசு ஓராண்டு நிறுத்தி வைத்துள்ளத்தை போன்று பொது மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை ஒராண்டுக்கு பிறகு அரசு அமல்படுத்த முயன்றால் ஏழைகள் என்ன ஆவார்கள் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
கலைஞர் வீட்டு வசதி திட்டம் கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம். இந்த திட்டத்தையும் நிறுத்தி விட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வந்த ஊரக வீட்டு வசதித் திட்டம் பல குறைபாடுகளுடன் இருந்தது உண்மைதான். கட்டுமானச் செலவு இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகரித்துவிட்ட நிலையில் வீடு கட்ட வழங்கப்படும் நிதி ரூ.75 ஆயிரமாக இருந்தது. இதனால் ஏழை எளிய குடும்பங்கள் கடன் சுமையில் சிக்கினர்.
இதன் காரணமாக மிக அதிக எண்ணிக்கையில் வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை. தற்போதைய அரசும் இதே காரணத்தை சொல்லி இத்திட்டத்தினை கைவிட்டுள்ளது.