எங்கே செல்கிறது மாணவ சமுதாயம்!
, ஞாயிறு, 4 மார்ச் 2012 (15:56 IST)
எம்.பி.பி.எஸ். தேர்வில் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 9 பேர் சினிமா பாணியில் செல்போன் மூலம் தேர்வில் காப்பி அடித்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் கல்விக் கண் திறந்தவர் கர்மவீரர் காமராஜ். படிக்க வரும் மாணவர்களுக்கு உணவு வழங்கியவர் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., 9ஆம் வகுப்பு வரை எந்த மாணவர்களையும் பெயில் ஆக்க கூடாது என்பது மத்திய அரசின் சட்டம். இப்படி மாணவர்களின் நலனுக்காகவே இவை அனைத்தும் உருவாக்கப்பட்டது.ஆனால் மாணவர்களோ, வன்முறையில் ஈடுபடுவதுடன், கொலை, கொள்ளை போன்றவற்றிலும் ஈடுபட்டு மாணவ சமுதாயத்தையே சந்தேகப்படும் அளவுக்கு செய்துவிட்டனர். தற்போது ஒருபடி மேலே போய், செல்போன் மூலம் தேர்வில் காப்பியடிக்கிறார்கள் மாணவர்கள். இந்த நிகழ்வு தமிழகத்தில் அரங்கேற்றியுள்ளதுதான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு தேர்வு நடந்தது. தேர்வுக்கு பின்னர் 2 மாணவர்கள் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப்பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனனிடம் ஒரு புகார் தெரிவித்துள்ளனர்.''
தேர்வில் செல்போனை பயன்படுத்தி புளுடூத் போன்ற கருவியை காதில் பொருத்தி 10 மாணவர்கள் காப்பி அடித்து தேர்வு எழுதினார்கள்'' என்று. உடனடியாக விசாரணை நடத்தியதில் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 9 மாணவர்கள் நவீன முறையில் காப்பி அடித்தது தெரிந்தது.தேர்வு அறையில் இருந்தபோது செல்போனை மாணவர்கள் தங்களது இருதொடைகளுக்கு நடுவில் மறைத்து வைத்திருந்தும், அந்த செல்போனில் இருந்து ஒரு வயர்மூலம் இணைப்பு கொடுக்கப்பட்டு அந்த வயர், காதில் பொருத்திய சிறிய கருவியை வந்து அடைந்துள்ளது. காதில் இருக்கும் கருவி சிறிய கருவி. அது தூரத்தில் இருந்து யாராவது பார்த்தால் தெரியாது.இதே போல 9 மாணவர்கள் காதில் அந்த கருவியை வைத்து தேர்வு எழுதி உள்ளனர். இவர்களுக்கு வெளியில் இருந்து ஒரே ஆசிரியர் செல்போன் மூலம் பதில் அளித்திருக்கிறார். 9 மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் பதில் சொல்லியிருக்கிறார் அந்த ஆசிரியர். ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில் மாணவர் ஒருவர் தேர்வில் பயன்படுத்திய கருவி, அணிந்திருந்த சட்டை பறிமுதல் செய்யப்பட்டது.அந்த சட்டையின் உள்புறமாக வயர் செல்வதற்காக சட்டையின் காலர் பகுதியில் சிறிய துவாரம் போட்டிருப்பதும் தெரிந்தது. 9 மாணவர்கள் மட்டும்தான் இந்த மோசடி செயலில் ஈடுபட்டனரா வேறு சிலருக்கும் இதில் தொடர்பு இருக்கிறதா?, தேர்வு அறையில் இவர்கள் எத்தனை நாட்கள் இப்படி முறைகேட்டில் ஈடுபட்டனர். இதை தேர்வு கண்காணிப்பாளர் கவனிக்க தவறியது ஏன்? அவருக்கும் மாணவர்களுக்கும் தொடர்பு இருக்குமா என்பது பற்றி பல கோணங்களில் விசாரித்து வருகிறது எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட கமிட்டி.
காப்பி அடிக்க உதவி கருவி.காப்பி அடித்த 9 பேரும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் என்று தற்போது தெரியவந்துள்ளது. 9 மாணவர்களின் விடைகள் ஒருவருக்கொருவர் ஒத்துப்போகிறதா என்று பார்க்கப்படுகிறது. எத்தனை தேர்வில் இப்படி முறைகேடாக எழுதினார்களோ, அத்தனை தேர்வுகளும் இந்த மாணவர்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.இவர்கள் மீதும் தேர்வு கண்காணிப்பாளர் மீதும், தலைமை கண்காணிப்பாளர் மீதும் போலீசில் புகார் செய்து குற்ற நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வகை உள்ளதா என்று ஆராயப்பட்டு வருகிறது. இந்த மாணவர்களால் அவர்களின் ஆசிரியர்களுக்கு மட்டும் இழுக்கு அல்ல, அவர்கள் படித்த கல்லூரிக்கும் இழுக்கு. பிளஸ்-2 தேர்வில் 200-க்கு 200 மார்க் அல்லது 199 மார்க் எடுத்தால் தான் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைக்கும். அப்படி நன்றாக படித்த மாணவர்கள் கல்லூரிக்கு வந்து 50 சதவீத மார்க் கூட அதாவது பாஸ் மார்க் கூட எடுக்க முடியாதா? அப்படி என்றால் குறை எங்கே இருக்கிறது?. ஒழுக்கம் முக்கியம். இப்போது நடந்துள்ளது ஒழுக்கக்கேடு அல்லவா?இனி வரும் காலங்களில் மருத்துவ தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களில் செல்போன் ஜாம்மர் தொழில்நுட்பம் அமைக்கப்படுகிறது. அந்த வசதி இருந்தால் தான் தேர்வு மையமாக பயன்படுத்த கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இல்லையென்றால் அந்த கல்லூரி மாணவர்கள் வேறு கல்லூரிக்கு மாற்றப்படுவார்கள். இது குறித்த விரிவான சுற்றிக்கை அனைத்து மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த 450 கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட உள்ளது. இப்போது தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு செல்லதடை உள்ளது. அதைமீறி ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் நடந்துள்ளது.எனவே இனி வரும் தேர்வுகளில் கண்டிப்பாக ஒவ்வொரு மாணவரும் முறையாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார். மேலும் மாணவர்கள் நவீன கருவி வைத்திருக்கிறார்களா? என்றும் மெட்டல் டிடெக்டர் போன்ற கருவிகொண்டும் சோதனை போடப்படும். மாணவர்கள் அனைவரும் ஸ்கிரீனிங் செய்யப்படுவார்கள்.மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இப்போதே இப்படி இழி செயலில் ஈடுபட்டால் அவர்கள் மருத்துவத்தொழிலில் நேர்மையாக நடப்பார்கள் என்பதை நம்ப இயலுமா? அவர்களின் வாழ்க்கையிலும் நேர்மையை கடைப்பிடிப்பார்களா என்பது சந்தேகம்தான். மருத்துவ மாணவர்களே, நீங்கள் அனைவரும் சமுதாயத்தில் முக்கிய பங்கு உள்ளவர்கள். எனவே இப்படிபட்ட ஒழுங்கீனங்களில் ஈடுபட்டு வாழ்க்கையை தொலைக்காமல் நல்லவர்களாக வளரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன்.வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். என்ற சினிமா படத்தில் நடிகர் கமல்ஹாசன் தேர்வு எழுதும்போது காதில் புளூடூத் கருவியை பொருத்திக்கொண்டு அதை கையால் பொத்திக்கொண்டு இருப்பார். அவர் கேள்வியை செல்போனில் வெளியே உள்ள ஆசிரியரிடம் சொல்லுவார். அந்த கேள்விக்கு உரிய சரியான பதிலை ஆசிரியர் வெளியில் இருந்தபடி கமல்ஹாசனிடம் கூறுவார். தேர்வில் நூதன முறையில் காப்பி அடிப்பதாக இந்த காட்சி இருக்கும். அதே போன்ற முறைகேடு தற்போது சென்னையில் அரங்கேறியுள்ளது.